ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுக்க, அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.
ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், அதிமுக இரண்டாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாக உடைந்த அதிமுக..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு மூலம் பெரும்பான்மை பெறுவார் என கூறப்பட்டது. அதேநேரம், அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆனால் எஸ்.பி. வேலுமணி தரப்பிலான 25 எம்.எல்.ஏக்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட கட்சி மீண்டும் இரண்டாக உடைந்தது அதிகாரப்பூர்வமாக உறுதியானது. இதனால் கட்சி யாருக்கு சொந்தம் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. கட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இரண்டு தரப்புகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.
கட்சியும், அதிகாரமும் யாருக்கு?
கொறடா உத்தரவை மீறி, கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்த 25 எம்.எல்.ஏக்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்துள்ளது. இதுபோக எஸ்.பி. வேலுமணி ஆதரவில் இருந்து ஏராளமான மாவட்ட செயலாளர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும், சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதும் தானே எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். அதேநேரம், பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பவர்களே சட்டமன்ற குழு தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், கட்சி தலைமை சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது என்றும், கொறடா யார் என்பதை சபாநாயகர் அங்கீகரிக்காத நிலையில் தங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது எனவும் எஸ்.பி. வேலுமணி தரப்பு பேசி வருகிறது. இதனால் கட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்ற விரைவில் பொதுக்குழுவை கூட்டவும், இதற்காக கட்சி நிர்வாகிகளின் ஆதரவை திரட்டவும் இரண்டு தரப்பும் தீவிரம் காட்டி வருகிறது.
பெரும்பான்மை கிடைக்கக் கூடாது – திமுக?
இதனிடையே, தனிப்பெரும்பான்மை இல்லாத தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்துள்ளது. இதனால், ஆட்சி அதிகாரத்திற்காக தீய சக்தி என விமர்சித்த திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் நாடுவதா? என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபோக விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்பதோடு, தவெக ஆட்சி தொடர்வதில் திமுகவின் மறைமுகமான பங்கீடும் உள்ளதை உணர முடிகிறது. இதனை குறிப்பிட்டே திமுகவின் தயவில் தான் தவெக ஆட்சியே நடத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இந்நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவு மூலம், விஜய் அரசு பெரும்பான்மை பெறுவதை திமுக விரும்பவில்லையாம்.
சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தவெக ஆட்சி நடைபெறும் வரையில், மறைமுகமாக அதை கட்டுப்படுத்த முடியும் என திமுக நம்புகிறதாம். அந்த நிலை அப்படியே தொடர வேண்டும் என்பதற்காகவும், நிலையான ஆட்சி என்ற நிலையை விஜய் எட்டக்கூடாது எனவும் திமுக விரும்புகிறதாம். இதற்காக அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்கவும் அறிவாலயம் முன்வந்துள்ளதாக, பிரபல நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், “தவெகவுக்கு ஆதரவளித்துள்ள அதிமுகவின் 25 எம்எல்ஏக்களில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், விஜய் தலைமையிலான அரசு நிலைத்து விடும் என திமுக நினைக்கிறது. எனவே, அந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் அதிமுகவிற்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய, திமுக தயாராகி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உணர்த்தும் விதமாகவே, ”கட்சி தலைமை சொல்பவரைத் தான் கொறடாவாக சபாநாயகர் அங்கீகரிக்க வேண் டும் என்பதே விதி’ என திமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளாராம்.
திமுக சொன்னதெல்லாம் பொய்யா?
தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தவெக ஆட்சி அமைக்கட்டும் ஆறு மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பெருந்தன்மையாக அறிவித்து இருந்தார். ஆனால், புதியதாக வந்த கட்சி ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்காக பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுகவே கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அதிமுக ஆதரவுடன் திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தவெக தலைமையிலான அரசு நிலையானதாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவும், தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவிலேயே விஜயின் ஆட்சி இயங்க வேண்டும் என்பதற்காகவும் அதிமுகவிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்க திமுக முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை குறிப்பிட்டு, இது தான் திமுகவின் பெருந்தன்மையா? என தவெகவினர் விமர்சித்து வருகின்றனர்.