CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை, பட்ஜெட் என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
CM Vijay TN Govt: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, வரும் ஜுலை மாதத்தில் தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட உள்ளதாம்.
வேகமெடுக்கும் தமிழ்நாடு அரசு:
சட்டமன்ற தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதற்கட்டமாக நிர்வாக ரீதியாக பல்வேறு ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான பல்வேறு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளது. அதற்கான முதல் முயற்சியாக சட்டப்பேரவை கூட்டப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசின் நிதிநிலை எப்படி உள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையையும் முழு வேகத்தில் தயார்படுத்தப்பட்டு வருகிறதாம்.
இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை..
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளன்றே, மாநிலத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் அறிவித்தார். இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்கள் எவ்வளவு கடன்சுமையை உயர்த்திவிட்டு சென்றனர், எதற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற விவரங்களை மக்கள் அறிய வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக நேற்று சென்னையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “வெள்ளை அறிக்கை வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அறிவித்தார். அதாவது நடப்பு நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே வெள்ளை அறிக்கை வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடர் எப்போது?
மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபின் நடைபெற உள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இதில் ஆளுநர் முதலில் உரை நிகழ்த்த உள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும். இந்த ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே நிலவுகிறது.
தயாராகும் பட்ஜெட்.. எகிறும் எதிர்பார்ப்புகள்..
ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் அதாவது முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் மகளிருக்கான ரூ.2,500, தாய்மாமன் சீர், தாலிக்கு தங்கம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் என தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அதன் முடிவில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பதில் உரை வழங்குவார். தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 துறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பதோடு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.