TVK Cong Jothimani: தவெகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குதிரை பேரத்தை நியாயப்படுத்த முடியாது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
TVK Cong Jothimani: தவெகவின் அனைத்து நடைமுறைகளையும் ஆதரிக்க முடியாது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
ஜோதிமணி விமர்சனம்
அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தவெகவில் இணைந்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குதிரை பேரத்தின் மூலம் பெரும்பான்மையை எட்ட விஜய் தலைமையிலான அரசு முயன்று வருவதாக அதிமுக மற்றும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தவெகவின் அனைத்து நடைமுறைகளையும் ஆதரிக்க முடியாது எனவு, குதிரை பேரத்தை நியாயப்படுத்த முடியாது என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி தெரிவித்துள்ளார்.
”தவெகவை அனைத்திலும் ஆதரிக்க முடியாது”
ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க வின் தலைவர் ஜோசப் விஜயை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது.
”குதிரை பேரத்தை நியாயப்படுத்த முடியாது”
அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது . இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை ,காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக,குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும்,அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.
”காங்கிரசுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை”
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும்,நேருவுக்கும் ,கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது” என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் இரட்டைக் குரல்
முன்னதாக இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் வெளியிட்ட பதிவில், “உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க முயன்றனர். அதனால்தான் காங்கிரசை தொடர்ந்து விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீக் தரப்பினரும் தவெக அரசில் இணைந்தனர். இப்போது மூன்று
அதிமுக எம்.எல்.ஏக்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்” என தெரிவித்து இருந்தார். ஆனால், அதற்கு நேர் எதிராக ஜோதிமணி கருத்து பதிவிட்டுள்ளார்.