TVK Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசியல் நிலைப்பாடுகளை கண்டு, இதற்கு திமுக மற்றும் அதிமுகவே தமிழ்நாட்டை ஆளலாமே என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.TVK Vijay: ஊழல் அதிகாரிக்கு முக்கிய பதவி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் இணைப்பு ஆகியவை, முதலமைச்சர் விஜயின் மீது கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளன.
விஜயின் தூயசக்தி பரப்புரை:
கடந்த 60 ஆண்டுகள் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த பிறகும், தமிழ்நாடு உண்மையான வளர்ச்சி நிலையை எட்டவில்லை என தேர்தல் பரப்புரையின் போது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டினர். 2026 சட்டமன்ற தேர்தல் என்பது தூயசக்தியான தவெகவிற்கும், தீயசக்தியான திமுகவிற்குமான நேரடி போட்டியாக சூளுரைத்தார். லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசை வழங்குவேன் என முதலமைச்சராக பதவியேற்றபோதும் விஜய் உறுதியளித்தார். இதனால் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கான, மாற்று அரசியலை தவெக வழங்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அண்மைக் காலங்களாக தவெக அரசின் அரசியல் நிலைப்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாகவும், மற்றொரு திராவிட கட்சியாகவே தவெக மாறி வருகிறது என்ற எண்ணங்களையும் விதைக்க தொடங்கியுள்ளன.
தவெகவில் அதிமுக Ex.எம்.எல்.ஏக்கள்
உதாரணமாக நேற்று 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தவெகவில் இணைந்துள்ளனர். இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட குதிரை பேரத்தில் விஜய் அரசு ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் மக்களின் தீர்ப்பை ஏற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. அப்படி இருக்கையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்களை உடனடியாக தவெகவில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அந்த 3 பேருக்கும் தவெக வாய்ப்பளித்தால், அது வரிப்பணத்தை சுரண்டுவது ஆகாது? கோடிகளை கொட்டி தேர்தலில் வென்று பதவியை பெற்றவர்கள், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வென்று அதிகாரத்திற்கு வந்தால் லாபம் பார்க்க முயற்சிக்கமாட்டார்களா? அப்படி நடந்தால் நீங்கள் எப்படி உங்களை தூயசக்தியாக சொல்லிக்கொள்ள முடியும் சிஎம் சார்?அருண் ஐ.பி.எஸ்ஸிற்கு முக்கிய பதவி..
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது தவெகவிற்கு கடும் நெருக்கடியை வழங்கியதாக கூறப்படும் அருண் ஐ.பிஎஸ். தற்போது தவெக ஆட்சியில் மிகவும் முக்கியமான லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திமுகவின் ஆதரவாளராகவே மாறி செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததே தவெக தான். இதுபோக லஞ்சம் பெற்றுக்கொண்டு குண்டாஸ் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராகவும் அருணிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரையே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளதால், புதிய அரசு அருணை காப்பாற்ற முயல்கிறதா? முன்னாள் திமுக அமைச்சர்களை காப்பாற்ற முயல்கிறதா? என்ற கேள்வியும் எழுகின்றன. ஊழல் அதிகாரிகளை ஒழிக்காமல், ஊழலை எப்படி ஒழிக்க முடியும் என தவெக அரசு நம்புகிறது?சட்ட-ஒழுங்கு விவகாரம்:
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட-ஒழுங்கு திமுக ஆட்சியில் சீர்கெட்டு இருப்பதாகவும், தவெக ஆட்சி அமைந்தால் அதற்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் விஜய் பரப்புரையின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு சிறுமி கொல்லப்பட்டது தொடங்கி பல்வேறு மோசமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. வழக்கம்போல் அமைச்சர்கள் நேரில் ஆறுதல் கூறுவது, இழப்பீடு வழங்குவது, தகுதிக்கேற்ற அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது போன்ற சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதை தானே கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சியாளர்களும் செய்தன. அதையே செய்ய தவெக எதற்கு, பழைய ஆட்சியாளர்களே போதுமே? என்பதே தவெக அனுதாபிகளின் கேள்வியாக உள்ளது.
குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதைவிட குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை புதிய அரசு உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது வாக்காளர்களுக்கு வழக்கம்போல ஏமாற்றமே மிஞ்சுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.