ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் அசத்திய விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியாக அதிமுகவும் வீழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்த விஜய் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 117 தொகுதிகளை எட்ட முடியாத காரணத்தால் தமிழகத்தில் பல வருடங்களுக்கு பிறகு தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தொங்கு சட்டசபை
எனவே திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்தோ அல்லது அதிமுகவை கூட்டணியில் இணைத்தோ பெரும்பான்மையை காண்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார். அப்போது தவெக எம்எல்ஏக்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தோடு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். இதனையடுத்து நாளை விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்கவுள்ள நிலையில், இன்னும் இரண்டு வார காலத்தில் பொரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது.
சி.வி.சண்முகம் ஆலோசனை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திடீர் திருப்பதாக நேற்று இரவு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
தவெகவிற்கு ஆதரவளிக்க முடிவு.?
இதனையடுத்து சி.வி.சண்முகம் தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமானது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.