Minister Ramesh: திருச்செந்தூர் கோயிலில் தன்னிடம் லஞ்சம் வாங்கிய நபரை மன்னித்து விட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Minister Ramesh: அமைச்சர் ரமேஷிடமே லஞ்சம் வாங்கியிருந்தாலும் பிரமாணர் என்பதற்காக மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டு விட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளன.
அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை இல்லையா?
திருச்செந்தூர் முருகன் கோயிலில், பொதுமக்களில் ஒருவராக டி-ஷர்ட் அணிந்தபடி எளிய முறையில் இந்து சமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை அடையாளம் காணாத அர்ச்சகரில் சிலர் அமைச்சரின் உதவியாளரை அணுகி, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விஐபி தரிசன வழியில் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து அந்த ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்கும் நோக்கில், ஜி-பே வழியாக பணத்தை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு அர்ச்சகர்கள் அனைவரையும் கையும் களவுமாக பிடித்து, அவர்கள் கைப்படி விளக்க மற்றும் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். இதனிடையே, தவறு செய்தவர்களும், அமைச்சரும் ஒரே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மன்னிப்பு கடிதம் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக இணையத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.
அர்சகர்கள் மீது பாகுபாடு காட்டினேனா? – அமைச்சர் ரமேஷ்
கோயில் ஆய்வு பணிகளுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், இணையத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “பக்தர்கள் தரப்பிலிருந்து பல்வேறு வழிகளில் என்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படியே யாரும் எதிர்பாராத விதமாக இன்று விடியற்காலையில் ஆய்வு செய்தேன். அப்போது பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக தரிசனதிற்கு அழைத்துச் செல்லப்படுவதை கண்டுபிடித்தோம். அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அது யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும், பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள் மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னித்துவிட்டு விட்டோம் என இணையத்தில் ஒரு தவறான தகவல் பரவுகிறது. ஆனால், அவர்களிடம் விளக்கம் கேட்டு விளக்க கடிதம் மட்டுமே வாங்கியுள்ளோம். எப்படி, எதற்காக பணம் வாங்கிக் கொண்டு மக்களை உள்ளே அனுமதித்தீர்கள் என விளக்கக் கடிதம் வாங்குவது ஒரு நடைமுறை. இதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
”பொய்களை பரப்பும் கும்பல்”
கட்டண வசூல் மட்டுமின்றி அன்னதான கூடங்கள், கோயில் சொத்துகள் பற்றிய ஆவணங்கள், கோயிலுக்கு வரவேண்டிய வருமானம் எங்கெல்லாம் தடைபட்டுள்ளன? தேவையான அடிப்படை வசதிகள் என்ன? தூய்மையாக பராமரிக்க செய்ய வேண்டியது என்ன? பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகள் என்ன? என்பது பற்றியும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். இதன் முடிவில் தொடர்புடைய, உண்மையிலேயே குற்றம்செய்த யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். அதற்கு முன்பாக தவறான தகவலை வெளியிட்டு, ஒருசாரார் மீது மிருதுவாக நடந்துகொள்வதாக பரப்பி வருகின்றனர். அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை” என அமைச்சர் ரமேஷ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமைச்சர் போட்ட ட்வீட்
இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு மத்தியில் அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.