CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற பயணத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் யாருமே இடம்பெறாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டபோது, அவருடன் சில நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் மட்டுமே இடம்பெற்று இருந்தனர்.
சர்ச்சையான சிஎம் விஜயின் டெல்லி பயணம்:
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக கடந்த 27ம் தேதி விஜய் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதேநேரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் முதலமைச்சரின் டெல்லி பயணம் தோல்வி அடைந்துவிட்டதா என சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். அதேநேரம், விஜய் தனிவிமானத்தில் பயணித்ததும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தனி விமானத்தில் பயணித்த 9 பேர்
தேர்தல் பரப்புரையின் போது பயணிப்பதபடியே, டெல்லி பயணத்தின் போதும் முதலமைச்சர் விஜய் தனி விமானத்தையே பயன்படுத்தினார். ஆனால் அந்த பயணத்தின் போது அவருடன் முக்கிய அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்ச்சர்களோ யாரும் இடம்பெறவில்லை. மாறாக அவரது நண்பர்கள், ஆலோசகர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஆகியோர் மட்டுமே விமானத்தில் உடன் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பட்டியலின்படி,
- முதலமைச்சர் விஜய்
- P ஜெகதீஷ்
- விஷ்ணு ரெட்டி
- ஜெகதீஷ் அவஸ்தி
- ராஜேந்திரன் சி
- நயீம் அயித்தண்டி கூவகண்டி
- நரிசெட்டி மரியா ஜோசப் அனில்
- ஜி. செந்தில்குமார் – பாதுகாப்பு அதிகாரி
- ராம்குமார் – பாதுகாப்பு அதிகாரி
தனிநபர்களுக்கு முக்கியத்துவம் ஏன்?
மேற்குறிப்பிடப்பட்டவர்களில் ஜெகதீஷ் அவஸ்தி என்பவர் முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணர் ஆவார். விஷ்ணு ரெட்டி என்பவர் பல்வேறு மாநிலங்களில் கிரானைட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஆவார். ஜெகதீஷ் என்பவர் விஜயுடன் நீண்டநாட்களாக பயணித்து வரும் மேலாளர் ஆவார். முதலமைச்சராக டெல்லிக்கு விஜய் மேற்கொண்ட இந்த முதல் பயணம், மாநில உரிமைகள் சார்ந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்பட்டது. அப்படி இருக்கையில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட யாரையும் உடன் அழைத்துச் செல்லாமல், அரசியல் ஆலோசகர், மேலாளர், நண்பர் மற்றும் சிகை அலங்கார நிபுணருக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து, தனி விமானத்தில் அழைத்துச் செல்வது என்பது அவசியமா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாருடைய வரிப்பணம்?
முதலமைச்சராக பொறுப்பேற்றதும் வெளிப்படையாகவும், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாத வகையில் அரசு நிர்வாகம் இயங்கும் என சூளுரைத்துவிட்டு, தற்போது சில தனி நபர்களை எல்லாம் அரசு செலவில் உடன் அழைத்துச் செல்வது நியாயமா? என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த தனி விமான பயணத்திற்கான மொத்த செலவையும் அரசு செய்திருந்தால், ஜெகதீஷ் அவஸ்திக்கு, விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோருக்கு எவ்வளவு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்களையும் உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் வரிப்பணத்தை இப்படி தனிநபர்களுக்காகவும், தனக்கு வேண்டியவர்களுக்காகவும் முதலமைச்சர் வீணடிப்பதை ஏற்க முடியாது எனவும் சாடி வருகின்றனர்.