தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இணைவது தவெக கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு கட்சியிலும் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளால் தமிழகத்தின் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக-வில் மிகப்பெரிய பூகம்பமே வெடித்து தற்போதுதான் அடங்கியுள்ளது. சிவி சண்முகம் தவிர எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த மற்ற அனைவரும் அவரது பக்கமே இணைந்துவிட்டனர்.
அடுத்தடுத்து இணையும் அதிமுக:
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏ-க்களான ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இன்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தன்னை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். அதிமுக-வினர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக-விற்கு புதிய போட்டியாக உருவாகியிருக்கும் தவெக-வில் இணைவதால் தங்களது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற போக்கிலே அவர்கள் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.
தவெக-வில் அதிகாரம் யாருக்கு?
அதிமுக-வினர் தொடர்ந்து தவெக-வில் இணைவது இரண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இதன்மூலம் கட்சியில் தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பொறுப்புகளை பெற முயற்சிப்பார்கள் என்றும், அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு பெறுவார்கள் என்றும், இதனால் கட்சி தொங்கியது முதலே கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தவிர அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் தவெக சார்பில் ஏற்கனவே பாேட்டியிட்டவர்களுக்கு விஜய் வாய்ப்பு வழங்குவாரா? அல்லது தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. மேலும், ராஜ்யசபா பதவி தவெக-விற்கு கிடைத்திருக்கும் சூழலில், ராஜ்யசபா உறுப்பினராக விஜய் மாநிலங்களவைக்கு யாரை அனுப்பி வைக்கப்போகிறார்? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
வேண்டுகோள்:
விஜய்க்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரமும், முன்னுரிமையும் எப்போதும் அளிக்க வேண்டும் என்றும், அதை கட்சித் தலைமை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தி வருகிறது. இதுதவிர விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக-விற்கு மாற்றாகவே தவெக-விற்கு வாக்களித்தோம். ஆனால், அந்த கட்சியில் இருப்பவர்கள் இங்கே இணைந்தால் எப்படி மாற்றம் வரும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.