இயக்குநர் அட்லி சிறந்த திரைப்படக் காட்சிகளை எடுத்து வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார்,அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது என்று தவெக அரசை திமுக எம்எல்ஏ சிவசங்கர் கடுமையாக விமர்சித்தார்.
சட்டமன்றத்தில் காரசார விவாதம்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு நடைபெற்று இருக்கிறது என்று ஆளுநர் சொல்லி இருக்கிறார். தேசிய கீதத்தை முதலில் படிக்கவில்லை என்பதுதான் என்று கூறி தொடர்ந்து பேச முயற்சித்த போது சபாநாயகர் குறுக்கிட்டார். ஆளுநர் நன்றி தெரிவித்துவிட்டார். எனவே இனி பிரச்சனைகளை எழுப்ப வேண்டாம் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய சிவசங்கர், இயக்குநர் அட்லி சிறந்த திரைப்படக் காட்சிகளை எடுத்து வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார், அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது என்று விமர்சித்தார்.
அட்லியை இழுத்த சிவசங்கர்
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், காலமும் காட்சியும் ஏற்கனவே மாறிவிட்டது. அன்றும், இன்றும், என்றும் மாநில உரிமை மற்றும் மொழி உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் நேற்று ஒன்றிய அரசின் சுற்றறிக்கை மீறி தமிழுக்கு தான் முதலிடம் கொடுத்தோம் தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்த் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். ஆனால் முழு அரசியல்வாதியான சிவசங்கர் அட்லியை குறித்து பேசியது ஆச்சரியமாக உள்ளது. அட்லிக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்?
தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் சிவசங்கர், இயக்குனர் அட்லியையும் பாலோ செய்கிறேன். உங்களையும் பாலோ செய்கிறேன் பராசக்தி திரைப்படத்திற்காக கருணாநிதி எழுதிய வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. சட்டப்பேரவையில் பேசுவதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வார்த்தை விளையாட்டு என்று கூறுகிறோம். இன்னும் பல சுவையான செய்திகளை வரும் நாட்களில் ஆளுங்கட்சியினருக்கு சொல்வேன் என்றார். மேலும், ஆக்கபூர்வமான ஆட்சியை வழங்கும் பணியை மட்டும் பாருங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனித்து நிற்க தயார் – திமுக
இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி தொடர்பாகவும்,வாக்கு வித்தியாசம் தொடர்பாக திமுக உறுப்பினர் சிவசங்கர் பேசியதற்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்து பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்து பெற்ற வாக்குகளையும், பல கட்சி கூட்டணியுடன் திமுக பெற்ற வாக்குகளையும் ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல என்றார். இதற்கு பதிலளித்த சிவசங்கர், அமைச்சரின் கருத்துகள் சரிதான். ஆனால் எங்களோடு வாக்குகள் பெற்றவர்களின் உதவியுடன்தான் ஆட்சி நடைபெறுகிறது. வரும் காலத்தில் தனித்து நிற்கத் தயாராக இருக்கிறோம் என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இறுதியாக அமைச்சர் ராஜ்மோகன், எங்களுக்கு எதிராக பேசுவதாக நினைத்து தமிழக மக்களுக்கு எதிராக யாரும் பேசுவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.