’திமுக என்ன செய்தாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவர்கள் பாணியிலேயே திருப்பிக் கொடுப்போம் என தவெக எம்.எல்.ஏக்கள் பேசியதால் சட்டமன்றமே சிறிது நேரம் களேபரமாகியது’
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நிலையில் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மேகதாது அணைக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து, அந்த தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
இதுவரையில் அமைதியாக சென்ற சட்டமன்றத்தில் இதன்பின்னர் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியது.
என்ன நடந்தது சட்டமன்றத்தில்..?
விளாத்திக்குளம் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் ‘கொளத்தூரில் எங்கள் தலைவர் ஐந்து நிமிடம் பேசியதற்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியுற்றது குறித்து மறைமுகமாக அவர் பேச, உடனடியாக திமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.
திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் எழுந்து ‘நாம் இப்போது விவாதித்துக்கொண்டிருப்பது விளாத்திக்குளம் பாலியல் வன்கொடுமை தொடர்பான விஷயம். இதில் எதற்கு கொளத்தூர் பற்றி இழுக்கின்றீர்கள்?’ என அவர் கேட்க, திமுக உறுப்பினர்கள் சிலர் தங்கள் தலைவர் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று குரல் கொடுக்கத் தொடங்கினர். இதனை கண்ட தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக எழுந்து அப்படியே நின்று திமுகவினரை நோக்கி கத்தத் தொடங்கினர். இதனால் சட்டப்பேரவையே பரபரப்புக்கு உள்ளாகத் தொடங்கியது.
இருதரப்பிலும் சரமாறியாக வந்து விழுந்த சொற்கள்
அதன்பின்னர் திமுக – தவெக இரு தரப்பு எம்.எல்.ஏக்களும் சரமாரியாக ஒருவரை ஒருவர் பார்த்து கடுமையான வார்த்தைகளால் பேசத் தொடங்கியதால், அவையே களேபரமாகிப்போனது.
திமுகவினரை அடிக்க பாய்ந்தாரா தவெக எம்.எல்.ஏ ?
இந்நிலையில், அவையின் கடைசி வரிசையில் இருந்த சென்னையை சேர்ந்த தவெக எம்.எல்.ஏ ஒருவர் அங்கிருந்து கைகளை ஓங்கிக்கொண்டு திமுகவினரை தாக்குவது போன்று முன்னேற்றி வந்ததும் சட்டமன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நேரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் இருப்பதாக திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் பேசியதற்கும் தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார்.
நீங்க என்ன பண்ணாலும் அதே மாதிரியான பதிலடி கிடைக்கும் – எச்சரித்த தவெகவினர்
இதனையடுத்து திமுகவினர் என்ன செய்தாலும் அதற்கு அமைதியாக இருக்க மாட்டோம். அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்போம் என தவெக எம்.எல்.ஏக்களும் உரத்த குரலில் பேசினர். இதனால் மீண்டும் அவையில் சலசலப்பு சற்று நேரம் ஏற்பட்டு அமைதியடைந்தது.