Thiruma TVK Vijay: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
Thiruma TVK Vijay: திமுக கூட்டனியில் போட்டியிட்ட நாங்கள் எப்படி தவெக வெற்றிக்கு மகிழ்ச்சி அடைய முடியும் என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
”தவெக வெற்றியால் மகிழ்ச்சி இல்லை”
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலான விருதுகள் வழங்கும் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கி பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், “தேர்தல் முடிவில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக தவெக வந்துள்ளது. நமக்கு அதில் மகிழ்ச்சி இல்லை தான். ஏனென்றால் நாம் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எப்படி நாம் மகிழ்ச்சி அடைய முடியும்? இன்னும் சொல்லப்போனால் தவெகவை நாம் விமர்சித்து இருக்கிறோம். எப்படி பதவிக்காக உடனே போய் ஒட்டிக்கொள்ள முடியும்? எப்படி பதவிக்காக கட்டி புரண்டு உருள முடியும்.
விஜயை ஆதரிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு – திருமா
RSS பெற்றெடுத்த பிள்ளை என சொல்லி விமர்சித்துவிட்டு, இல்லை இல்லை உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் எனக்கு துணை முதலமைச்சர் பதவி தாருங்கள் என்றா பேசினோம்? கெஞ்சினோம்? அதற்காக காத்திருந்தோம, இல்லை. நாங்கள் அப்படி பேசியது எங்களுக்கு இருந்த சந்தேகம். முதலமைச்சர் விஜய் நினைத்திருந்தால் அதிமுகவினுடைய ஆதரவினை பெற்று ஆட்சி அமைத்திருக்க முடியும். அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால் இதையெல்லாம் தவிர்த்து அவர் எடுத்து முடிவு எங்களுக்கு வியப்பை கொடுத்தது. மதசார்பற்ற சக்திகளாக, களத்தில் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ள எங்களைப் போன்றவர்களை அழைத்து ஆதரவை கேட்டது துணிச்சலான முடிவு. எனவே நீங்கள் எடுத்து இருக்கும் நிலைப்பாட்டை நாங்கள் அங்கீகரிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடரும் – திருமா
மதச்சார்பின்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது எங்களுக்கு வெளிப்பட்டு இருந்தது. அது தேர்தலுக்கு முன்பு இருந்த சந்தேகம். 5 ஆண்டுகள் ஆட்சி தொடரும் தேர்தலுக்கு பிறகு நீங்கள் எடுத்த நிலைப்பாடு எங்களுக்கு அந்த சந்தேகத்தை போக்கியிருக்கிறது. எனவே நாங்க ஆதரவு நல்குகிறோம். உறுதியாக இருப்போம். என்றைக்கும் தோழமைக்கு உண்மையாக இருப்போம். 5 ஆண்டுகள் வரை உங்கள் ஆட்சி தொடரும். அதற்கு நாங்கள் துணை இருப்போம் என சொல்லியிருக்கிறோம். இதில் என்ன துரோகம் இருக்கிறது. பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள், நீங்கள் திமுகவில் இருக்கிறீர்களா என்று?
திமுகவே அறிவித்துவிட்டது – திருமாவளவன்
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என திமுக தலைமை அறிவித்துவிட்டது. நான் அறிவிக்கவில்லை. நான் இதுவரை அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் விசிக இல்லை என நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கின்றோம் என்றும் நாங்க அறிவிக்கவில்லை. அமைச்சரவையில் இருக்கிறோம். கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை கடந்த 1 ஆம் தேதி நடந்ததில் பங்கேற்றோம். ஆனால் இன்னும் அதில் ஒரு முடிவும் எடுக்கவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அதில் இடம்பெறுவோம். அதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. இதை ஏன் இப்போது நான் சொல்கிறேன் என்றால், திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி விசிகவில் உள்ள ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோதே திமுக தலைமையே சொல்கிறது விசிகவுடன் எங்களுக்கு உறவு இல்லை என்று. நானா சொன்னேன்?” என திருமாவளவன் பேசியுள்ளார். இதனால் விசிக, ஆளுங்கட்சியான தவெக உருவாக்கும் புதிய கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.