தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், கூட்டணிக்காக சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது தவெக. அதில், காங்கிரஸ், சிபிஐ, தற்போது விசிக என, திமுக கூட்டணிக்கு உலை வைக்கும் அளவிற்கு தவெக அழைப்புகளை விடுத்துள்ளது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிகவிற்கு விஜய் கடிதம்
ஏற்கனவே காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்டோருக்கு கூட்டணி அழைப்பு விடுத்த தவெக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக மீது அதிருப்தியில் இருக்கும் திருமா வருவாரா.?
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிகவிற்கு தவெக சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், திருமாவளவன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஏற்கனவே, திமுக மீது திருமாவளவன் அதிருப்தியில் இருப்பது தேர்தலுக்கு முன்பாகவே வெளிப்படத் தொடங்கியது.
ஆட்சியில் பங்கு என்ற மனநிலைக்கு திருமாவளவன் வந்துவிட்டது அவரது பேச்சுக்கள் மூலம் தெரிந்தாலும், கூட்டணிக்காக திமுகவிற்கு கட்டுப்பட்டு அவர் செயல்பட்டு வந்தார். எனினும், தேர்தலுக்கு பின்பாக பேசிய அவர், விசிகவினர் தேர்தல் களத்தில் சரியாக பணியாற்றவில்லை என்பதை வெளிப்படையாகவே கூறினார். அதேபோல், அவர் கேட்ட தொகுதிகளையும் திமுக கொடுக்காததால், அதிருப்தியில் தான் இருக்கிறார் திருமாவளவன்.
இதனால், நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் திமுக கூட்டணியை விட்டுவிட்டு, தவெக உடன் அவர் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதே, கூட்டணி கட்சிகள் வந்தால், அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என்றே விஜய் கூறினார். அதனால், ஒருவேளை திருமாவளவன் தவெக உடன் இணையலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், அவரது முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தவெக பக்கம் வரும் காங்கிரஸ், சிபிஐ.?
மறுபுறம், ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் கட்சியின் முடிவு இன்றே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், நாளை அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவை அறிவிப்போம் என சிபிஐ தெரிவித்துள்ள நிலையில், அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காலியாகும் திமுக கூட்டணி
தவெக தற்போது அழைப்பு விடுத்திருப்பது எல்லாமே திமுக கூட்டணிக் கட்சிகள். அவர்கள் அனைவரும் தவெக உடன் கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணி கலகலத்துவிடும். பிரமாண்டமான கூட்டணி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிக்கொண்டிருந்த நிலையில், அந்த கூட்டணிக்கே தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.