முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு ஊழலுக்கு எதிராக பேச யோக்கியதை இருக்கிறதா? என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் இருவரும் இன்று தவெக-வில் இணைந்தனர். இவர்கள் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த காலத்தில் இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழலுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டதாக விஜய் கூறும் தவெக-வில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இரு விஜயபாஸ்கரையும் கட்சியில் விஜய் சேர்த்திருப்பது மிகப்பெரிய எதிர்ப்பை விஜய்க்கு உண்டாக்கியுள்ளது.
இதுதொடர்பாக, திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
போலிப் பத்திரம் தயாரித்தவர்:
கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போலிப் பத்திரம் தயாரித்து போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர். வேறு ஒருவருக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்துக்கு போலிப் பத்திரம் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
இது தொடர்பாக குற்றச்சாட்டு பதிவானதும் கரூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டார் அவர். நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே தலைமறைவு ஆனார். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்து இழுத்து வந்தார்கள். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக வருமான வரித்துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.
துர்நாற்ற சக்தி:
இதெல்லாம் அவர் அரசியலுக்கு நுழைந்த காலத்தில், அமைச்சர் ஆவதற்கு முன்பு நடந்தது அல்ல. அமைச்சராக இருந்த பிறகு நடந்தவை ஆகும். 2024 ஜூலை மாதத்தில் நடந்தவை ஆகும். இந்த யோக்கிய சிகாமணியையும் இணைத்துக் கொள்ள இருக்கிறார் துர்நாற்ற சக்தி விஜய்.
குட்கா விஜயபாஸ்கர்:
விராலிமலை விஜயபாஸ்கருக்கு ‘குட்கா விஜயபாஸ்கர்’ என்றுதான் பெயர். சென்னையில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது.
குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்கு துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.
இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், ‘’டெல்லியில் இருந்து ஏராளமான
தமிழ்நாட்டிற்கு குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களை கொடுத்துள்ளது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது.
லஞ்சம் பெற்ற ஆதாரம்:
அதில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பி.க்கள் பெயர்கள் இருந்தன. விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்துறை அனுப்பி இருந்தது. அவரைத் தான் எம்.எல்.ஏ. பதவி விலக வைத்து த.வெ.க.வில் இணைத்துக் கொள்கிறார் துர்நாற்ற சக்தி விஜய்.
யோக்கியதை இருக்கிறதா?
டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். (2023 மே. 22) வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இவரைத் தான் சேர்த்துக் கொள்கிறார் துர்நாற்ற சக்தி விஜய். முதலமைச்சர் விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறதா?
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.