CPM On Stalin: விரைவில் தேர்தல் வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதன் பொருள் இப்போது தான் புரிகிறது என, சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
CPM On Stalin: ஆட்சி அதிகாரத்தில் இல்லாததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என, சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.
திமுகவை நேரடியாக சாடிய சண்முகம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசுகையில், “மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என வழங்கி இருக்கும் தீர்ப்பை ஏற்க மறுத்து தான் இதுபோன்ற குதிரை பேரம், கழுதை பேரம் போன்றவற்றில் எல்லாம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் தான் இத்தகைய முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது.
ஸ்டாலின் சொன்னது இதை தானா?
விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என சில நாட்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கான பின்ன்ணி என்ன என்பது இப்போது தான் தெரிகிரது. அதற்கான ஒரு தீவிரமான முயற்சியில் இருக்கிறார்கள் என்பதை தான், சட்டமன்ற உறுப்பினரை பேரம் பேசி வாங்கும் செயல்கள் காட்டுகின்றன. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து ஒரு கட்சியில் இருந்து விலகுவது, வேறொரு கட்சியில் சேர்வது என்பது தமிழ்நாட்டில் சாதாரணமான விஷயம். இடதுசாரிகளை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சியை நோக்கி மாறுவது என்பது பலமுறை தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது” என பெ. சண்முகம் பேசியுள்ளார்.
கோடிக்கணக்கில் பேரம்..
மேலும் பேசுகையில் விரும்பி ஒருவர் கட்சி மாறுவது என்பது வேறு. ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசி ஒருவரை வாங்குவது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதில் யார் சம்மந்தப்பட்டு இருந்தாலும், அவர்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான தண்டனையை பெற்றுதருவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
ஆரோக்கியமற்ற அரசியல்..
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பான கேள்விக்கு, “இது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என பகிரங்கமாக வலியுறுத்தி இருந்தேன். தவெக தலைமையிடமும் இதுதொடர்பான கருத்துகளை தெரிவித்தோம். அப்போது அவர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு எங்களுடன் இணைகின்றனர். அதை எப்படி நாங்கள் தடுக்க முடியும் என தவெக தரப்பில் விளக்கமளித்தனர். அப்படி இருக்கையில் அவர்களை ஏன் உங்கள் கட்சியில் சேர்க்கிறீர்கள், வேறு ஒரு கட்சியில் புகலிடம் இருக்கிறது என்ற நம்பிக்கையிலேயே அதிமுகவினர் ராஜினாமா செய்கின்றனர் என அதிருப்தியை தெரிவித்து இருந்தோம். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம்” என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.