அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டின் தேதியை, தான் அறிவிக்கும் வரை வெளியே தெரியக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் முதலில் கேட்ட செப்டம்பர் 23ஆம் தேதிக்கு அனுமதி கிடைத்தாலும், அந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தேதியை மாற்ற முடிவு செய்தார் விஜய். சில தேதிகளைப் பரிசீலனை செய்த விஜய் குழுவினர், இறுதியாக அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என முடிவெடுத்தனர்.
அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. அத்துடன் காவல்துறையிலும் அந்த மாற்றுத் தேதிக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கத் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், தவெகவின் முதல் மாநாடு அறிவிப்பு வியாழனன்று அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வெளியானதால் விஜய் தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கி விட்டார் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய அனுமதியின்றியோ, தான் அறிவிக்காமலோ கட்சி சார்ந்த எந்த முக்கிய விஷயங்களும் வெளியே கசிந்து விடக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் விஜய்.
விக்கிரவாண்டி அருகே இருக்கும் வி சாலையில் 82 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தைச் சரி செய்தல், பந்தல் அமைத்தல், மேடை அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எனப் பல வேலைகள் இருக்கின்றன.
அதுவும் காவல்துறையினர் கூறியுள்ள 33 நிபந்தனைகளுடன் இடத்தைத் தயார் செய்ய வேண்டும். எனவே, அதற்கேற்றவாறு ஒப்பந்ததாரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு சுமார் 20 நாட்கள் தேவைப்படும் என அவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.அதற்குத் தகுந்தபடிதான் தற்போது கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான தேதி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் விஜயின் அறிவிப்பு வெளியான பிறகே அவர்கள் பணிகளைத் தொடங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.இதற்கான அறிவிப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில்தான் செய்திகள் வெளியாகிவிட்டன. இதனால் தற்போது அறிவிப்பு தேதி மாறி இருக்கிறது. இருந்த போதிலும் இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் மாநாடு நடக்க வாய்ப்பு உள்ளது.செப்டம்பர் 23-ல் மாநாட்டை முடித்துவிட்டு அக்டோபர் முதல் வாரத்தில் தன்னுடைய இறுதித் திரைப்படத்தில், அதாவது ‘தளபதி 69’ எனத் தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது அக்டோபர் இறுதியில் மாநாட்டுத் தேதி தள்ளிச் சென்றுள்ளது. எனவே, அவரின் இறுதிப் படத்தின் படப்பிடிப்பும் தள்ளிச் செல்கிறது.