திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு நிர்வாகிகள் பேசி வந்தனர். திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையேதான் இன்று முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது துணை முதலமைச்சர் பதவி தொடர்பாகவும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்தார். இதன்மூலம் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக பேசிய முதல்வர் ஸ்டாலின், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இரண்டு நாளில் நானும் ஆலோசனைகூட்டம் நடத்த உள்ளேன்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது தொடர்பான வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என உங்களுக்கே தெரியும். முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாக டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கை தான்.” என்று அவர் தெரிவித்தார்.மேலும் கொளத்தூர் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. வீட்டு பிள்ளை போல தான் என்னை பார்ப்பார்கள். எப்போதும் இங்கு வருவேன், நினைக்கும் போதெல்லாம் இங்கு நான் வருவேன்” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.