தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
தங்க நகைக்கடன்:
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக உதவியாக இருப்பது வங்கிகளின் மூலம் நகையை வைத்து தங்கள் அவசர தேவைக்காக பணத்தை பெறுவது என்பது மிக உபயோகமாக இருந்து வந்தது. கந்துவட்டி போன்றவற்றில் இருந்து தப்பிக்க இந்த நகைக்கடன்கள் மிக உதவியாக உள்ளது.
இந்த நிலையில் தான ரிசர்வ் வங்கி தங்க நகைகளை அடமானம் வைப்பதில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு:
இதற்கிடையில் தங்க நகைகளை அடகு வைப்பதற்கு ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன். என்று பதிவிட்டுள்ளார்,