Varisu : வாரிசு படம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று வாரிசு இயக்குநர் வம்சி விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களையும், ஆதரவையும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது. இதன் காரணமாக வாரிசு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்தார். சமீபத்தில் படத்தின் வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது. வசூலில் வெற்றிப்பெற்றாலும் வாரிசு விமர்சன ரீதியாக அடிவாங்கி வருகிறது. அரைத்த மாவையே இயக்குநர் அரைத்து வைத்திருப்பதாகவும், டிவி சீரியல்போல இருப்பதாகவும் பலரும் கருத்து பதிவிட்டனர். தொடக்கம் முதலே இப்படியான விமர்சனங்களை கேட்டு வரும் இயக்குநர் வம்சி இது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களையும், ஆதரவையும் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வீடியோவில் பேசும் வம்சி, படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? படக்குழு எவ்வளவு மெனக்கெடுகிறது என்பது தெரியுமா? பலரும் எவ்வளவு கடின உழைப்பை போடுகின்றனர் என தெரியுமா? இதெல்லாம் ஆடியன்ஸின் பொழுதுபோக்குக்காக. இது ஜோக் அல்ல. படம் எடுப்பதற்காக இயக்குநர்கள் பல தியாகங்களை செய்கிறார்கள். சீரியல் மாதிரி இருக்கிறது என்கிறார்கள். ஏன் சீரியலை குறைத்து பேசுகிறீர்கள்? அதுவும்தான் கிரியேட்டிவ் ஜாப். படத்தை ஆராயுங்கள். ஆனால் வேலையை மட்டம் தட்ட வேண்டாம். நான் கமெர்ஷியல் படம்தான் செய்தேன். அது ஆடியன்ஸின் பொழுதுபோக்குக்காக. வாரிசு சிறந்த கமெர்ஷியல் படம் என்றார்
இந்த வீடியோவை ஷேர் செய்து சிலர்அவருக்கு கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். ”படம் எடுப்பது சேவை மட்டுமல்ல. படம் பார்ப்பவர்களும் பணம் கொடுத்தே கண்டு ரசிக்கின்றனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநர்களும், நடிகர்களும் தாங்கள் செய்யும் வேலையை தியாகம் அளவுக்கு பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நல்ல படத்தை மக்கள் வெற்றியடையவே செய்கின்றனர்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளையில் வம்சிக்கு ஆதரவாகவும், சில சினிமா விமர்சகர்களுக்கு எதிராகவும் பதிவிட்டுள்ள இணையவாசிகள் சிலர், ”சினிமா விமர்சனம் என்ற பெயரில் சிலர் யூடியூப் வியூஸ்களுக்காக செய்யப்படும் அரைகுறை விமர்சனமே வம்சியை இப்படி பேச வைத்திருப்பதாகவும், யார் முதலில் கொடுப்பது என்ற அவசரகதியில் படம் குறித்தான தெளிவான விமர்சனம் கொடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அனைத்து படங்களையும் உலக சினிமாக்களோடு ஒப்பிட முடியாது என்பதையும், நபருக்கு நபர் ரசனை வேறு என்பதை ரிவியூ செய்யும் நபர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.