விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம் தளபதி படை அஞ்சாது. பின் வாங்காது என்று தவெக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?
திருச்சியில் இருந்து தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க இருக்கிறார் என்ற தகவல் வந்தவுடனேயே அரசியல் களம் பற்ற வைத்த சரவெடி போல் அதிர ஆரம்பித்துள்ளது. மதுரை மாநாடு முடித்த உடனேயே மக்கள் சந்திப்பிற்கு வியூகம் வகுத்துள்ளார் விஜய் என்று பரபரக்க ஆரம்பித்துள்ளது.
திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தங்குவதற்கு ஹோட்டல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் தங்குவதற்கு ஹோட்டலில் அறை கொடுக்க அதன் உரிமையாளர்கள் முன் வரவில்லை என்பதால், தவெக நிர்வாகிகள் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாட்டைத் தொடர்ந்து, அடுத்ததாக விஜய் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகி வருகிறார். தவெகவின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தவே விஜய் விரும்பினார். திருச்சி மாவட்டம் திருப்பத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை தமிழக அரசியலில் இருப்பதால், விஜய்யும் அந்த அரசியல் சென்டிமெண்ட்டில் தன்னையும் இணைத்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் திருச்சியில் மாநாடு நடத்த இடம் கொடுக்க யாரும் முன் வரவில்லை. இதன் பின்னணியில் அரசியல் மிரட்டல் இருந்ததாக அப்போதே தவெக தொண்டர்கள் புலம்பி வந்தனர்.
இதனால் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட்டது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இந்த மாநாடு அரசியல் கட்சியினரை பீதிக்கு உள்ளாக்கி உள்ளது என்றால் மிகையில்லை. மாநாட்டை தான் நடத்த முடியாதபடி செய்து விட்டனர். மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்று விஜய் திட்டவட்டமாக உத்தரவிட்டாராம்.
அதுமட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்களுக்கு விஜய் இன்னும் ஒருமுறை கூட செல்லவில்லை. இதனால் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க தவெக தலைவர் முடிவு செய்துள்ளார். இதற்கான அனுமதியை பெறுவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று காலையிலேயே திருச்சி வந்தார். அவரும் மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் இருவரும் சென்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி கடிதம் அளித்தனர்.
அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த மக்கள் சந்திப்பு பயணத்திற்காக விஜய் திருச்சியில் 2 நாட்கள் தங்கி அத்தனை தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு பிரச்சனையை அவர்கள் முதல் காரணமாக கூறுகின்றனர். ஹோட்டலில் இடம் கொடுத்தால் அரசியல் ரீதியாக தங்களுக்கு பெரிய பிரச்சினையக் ஏற்படும் என்பதை தவெக நிர்வாகிகளிடம் ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து அதிகாலையில் திருச்சி வரும் விஜய், பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவே சென்னை திரும்புவதற்கு ஏதுவாக திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 13ல் திருச்சி ஸ்ரீரங்கம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா பகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதன்பின் அரியலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், பெரம்பலூரில் குன்னம் பேருந்து நிலையம் ஆகியற்றில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மொத்தமாக 100 நாட்கள் விஜய் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. அதற்கேற்ப விஜய்யின் பிரச்சார திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எங்கள் தளபதி மக்கள் மனதில் தங்கிட்டாருய்யா… உங்கள் ஹோட்டலில் தங்க இடம் கொடுக்காவிட்டால் போங்கய்யா என்று மக்கள் பயணத்திற்கான பணிகளில் தவெக நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பயணத்தில் தவெக தலைவர் விஜய் எந்ததெந்த பிரச்சினைகளை மக்கள் வைத்து பேசுவார் என்ன எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.