படுக்கையிலேயே சிறுநீர் கழித்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது காதலி கத்தியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர் 25 வயதான பிரியானா லாகோஸ்ட். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் சுமார் 2 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார். இந்த இருவருக்கும் சில கருத்து வேறுபாடு இருந்த நிலையில், பிரேக் அப் செய்து கொள்ளலாம் என கடந்த வாரம் முடிவெடுத்துள்ளனர்.
சரி அதற்கு முன்பாக பார்ட்டி செய்யலாம் என கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியே சென்று ஒன்றாக மது அருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளனர். இருவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில், காலையில் விழித்து பார்த்த போது காதலி பிரியானாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மது போதையில் தூங்கிக்கொண்டிருந்த அவரது பாய்பிரண்ட், இருவரும் ஒன்றாக படுத்திருந்த படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இதை விழித்து பார்த்ததும் ஆத்திரம் தாங்காத காதலி பிரியானா தனது பாய் பிரெண்டை அடிக்கத் தொடங்கியுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த அந்த பாய்பிரெண்ட் அடிவாங்கிக்கொண்டே விழித்த நிலையில், படுக்கையில் இருந்து விலகி வெளியே ஓடிய போது, பிரியனா சமையல் அறை கத்தியை வைத்து இளைஞரை குத்தியுள்ளார்.
இதில் அந்த நபரின் நுரையீரல் படுகாயமடைந்துள்ளது. சம்பவத்திற்குப் பின் காதலி பிரியானாவே பதறிப்போய் அந்த இளைஞரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில், காவல்துறை பிரியனாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், அவர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.