தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல் ஆளாக வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கூட்டணி என அனைத்து பணிகளையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதிமுக. இதற்கு ஏற்ப கடந்த ஆண்டே பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அதிமுக,
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்
அடுத்ததாக பாமக, அமமுக தமாகா, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், ஐஜேகே என பல கட்சிகளும் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அந்த வகையில் தமிழகம் வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணியை இந்த கட்சிகள் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையேறவுள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடு அதிமுக மற்றும் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 1.15 மணியளவில் விமானத்தில் புறப்படும் மோடி, 2.15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தடைகிறார்.
இன்று தமிழகம் வரும் மோடி
இதனையடுத்து ஹெலிகாப்டர் மாக்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றடைகிறார். அங்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் கைகோர்க்கவுள்ளனர்.
மீண்டும் கைகோர்க்கும் இபிஎஸ்- டிடிவி
எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனக்கும் இடையே உட்கட்சி மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிரிந்து இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க பாஜக தலைமை எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை தழுவியது.
மேலும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக தனி தனி அணியாக போட்டியிட்டது. அப்போதும் வாக்குகள் பிரிந்து தோல்வி அடைந்தது. எனவே எதிர்ப்புவாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தற்போது டிடிவி தினகரனோடு கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.