சட்டமன்ற தேர்தலில் தினகரன் – எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த தவெக-வுடன் கூட்டணி சேர சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் தினசரி அரசியல் சதுரங்கம் அரங்கேறி வருகிறது. கடந்தாண்டு வரை எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து வந்த தினகரன் இந்த தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமியுடன் கரம் கோர்த்துள்ளார். மேலும், தங்களுக்குள்ளான சண்டை பங்காளிகள் சண்டை என்றும் கூறியுள்ளார்.
தினகரனை வீழ்த்த திவாகரன்:
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதில் முக்கிய பங்கு வகித்த சசிகலா அதிமுக – அமமுக கூட்டணியால் மிகவும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியான பிறகு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதப்பட்ட சசிகலா எந்த ஒரு அதிர்வலையையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தவில்லை.
அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நிலையில், தினகரனும் அவருடன் கூட்டணி வைத்துள்ளதால் சசிகலா இந்த தேர்தலில் தனது தாக்கத்தை காட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக, தனது சகோதரர் திவாகரனை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
தவெக-வுடன் கூட்டணியா?
தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யுடன், திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை கூடட்டணி சேர அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தவெக-வுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி சேராத நிலையில், தவெக-வுடன் அண்ணா திராவிடர் கழகத்தை கூட்டணி சேர வைத்து டெல்டா மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் அதிமுக – அமமுகவிற்கு அழுத்தம் தர சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினகரனைப் போலவே டெல்டா மாவட்டங்களில் மிகவும் செல்வாக்கான நபர் திவாகரன். ஆனால், அரசியல் நிலைப்பாட்டில் இவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடித்து வருகிறது. திமுக-வுடன் கூட்டணி வைப்பது ஜெயலலிதா விசுவாசிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கும்.
கூட்டணிக்காக காத்திருக்கும் தவெக:
இதனால், விஜய்யுடன் தவெக-வுடன் கூட்டணி வைக்க சசிகலா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. விசிக, காங்கிரஸ் என பல கட்சியினருடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், விரைவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த நபரை தங்கள் பக்கம் கொண்டு வர தவெக-வும் ஆர்வம் காட்டி வருகிறது.
தினகரனை அதிமுக – பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டாலும், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை உள்ளே கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர். துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவரை சேர்த்துக்கொள்ளவே இயலாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார்.
அவ்வாறு தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தால் 25 தொகுதிகள் வரை திவாகரன் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.