’அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நேரத்தில், கடைசி நேரத்தில் களத்தில் குதித்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்காக கூட்டணி கணக்கையே மாற்றியிருக்கின்றனர்’
எந்த பக்கம் செல்லும் என்று தெரியாமல் மதில் மேல் பூனையாக இருந்த பிரேமலதா, இன்று திடீரென திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அந்த கூட்டணியில் இணைந்திருக்கிறார்.
அதிமுக, திமுக என இருப்பக்கமும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த சூழலில், தேமுதிகவின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, திமுக கூட்டணியில் இணைய பிரேமலதா முடிவு செய்துள்ளார். அவரை அந்த முடிவு எடுக்க வைக்க திமுகவின் முக்கிய தளகர்த்தர்கள் இருவர் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றனர்.
அதிமுகவின் கசப்பான முடிவிலிருந்து மீளமுடியாத தேமுதிக
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பங்கேற்ற தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாய்மொழியாக உறுதி அளித்தது. ஆனால், இறுதியில் தேமுதிகவுடன் அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லையென அதிமுக கைவிரித்தது. இதனால், அதிருப்தியடைந்த பிரேமலதா அதிமுகவை விமர்சித்தார். இரு கட்சி நிர்வாகிகள் இடையே மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக வார்த்தை மோதல்களும் அப்போது நடந்தன. இருப்பினும், மீண்டும் இரு தரப்பும் 2026 தேர்தலுக்காக சமரச உடன்படிக்கைக்கு வந்தன. அதிமுகவுடன் திரைமறைவில் தேமுதிக பேசி வந்த நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இந்த முறை தருவதாக அதிமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே அதிமுக நிர்வாகிகள் கருதி வந்தனர். ஆனால், கடந்த காலத்தில் அதிமுக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் விட்டது பிரேமலதாவிற்கு மறக்கவில்லை. எனவே, இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்து உடன்படிக்கை செய்துகொள்ள அவர் திடீரென முடிவெடுத்திருக்கிறார்.
களத்தில் இறங்கிய ஏ.வ.வேலு – கே.என்.நேரு
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதிச் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான பின்னரே அமைச்சர் ராஜகண்ணப்பன், தேமுதிக எல்லாம் ஒரு கட்சியே இல்லையென்று விமர்சித்தார். ஆனால், கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய திமுகவின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களுமான ஏ.வே.வேலுவும், கே.என்.நேருவும் பிரேமலதா, சுதீஷிடம் பேசி, அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியைக் கொடுத்து திமுக கூட்டணியில் கொண்டுவந்து இணைத்திருக்கிறார்கள். 2016ல் விஜயகாந்த இருக்கும்போது நடைபெறாத கூட்டணி கணக்கை இப்போது எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு மூலம் நடத்திக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காங்கிரஸ் மீது கடுப்பில் இருக்கும் திமுக
ஆட்சியில் பங்கு, 40 தொகுதிகள் என திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்துவது மாதிரி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இஷ்டத்திற்கு தொடர்ந்து பேசி வந்த நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேசிய காங்கிரஸ் தலைமைக் எடுக்கவில்லை, ஒப்புக்கு கூட கூட்டணியை உடைக்கும்விதமாக பேச வேண்டாம் என்று கண்டிக்கவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்த திமுக, தேமுதிக-வை கூட்டணிக்குள் கொண்டுவந்து காங்கிரஸ் கட்சிக்கு கட்டம் கட்டியிருக்கிறது.
தேமுதிக காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்திருக்கும் நிலையில், இனி காங்கிரஸ் கட்சியினர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கவும் திமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். அரசியல் கணக்கின்படி இப்போது பார்த்தால் திமுக கூட்டணியில் தேமுதிக IN – காங்கிரஸ் விரைவில் Out. அவ்வளவுதான் !