மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற வைத்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் மேற்கொண்ட பரப்புரை எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லைக்கு வருகை தந்த விஜய்
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அவர் நேற்று தென் மாவட்ட கோட்டையாக அறியப்படும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பரப்புரை மற்றும் ரோடு ஷோ சென்றார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு தவெக தரப்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து ரோடு ஷோ செல்லும் வாகனத்தில் அவர் அங்கிருந்து பரப்புரை நடக்கும் இடமான கேடிசி நகர் ரவுண்டானா பகுதிக்கு சென்றார். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறமும் மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு சென்ற விஜய் அங்கு சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார்.
திணறிய திருநெல்வேலி
இதன்பின்னர் அங்கிருந்து ரோடு ஷோ சென்ற விஜய் சுமார் 35 கிலோமீட்டர் தூரம் வரை நெல்லை மாநகரத்துக்குள் பயணப்பட்டார். அவ்வளவு தான் திருநெல்வேலி நகரமே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. கண்ணாடி, கிட்டார், டெடி பியர் பொம்மை, வீர வாள், கார், போட்டோ ஃப்ரேம், குளிர்பான பாட்டில்கள் என அவருக்கு வழியெங்கும் மக்கள் கிஃப்ட்களை வாரி வழங்கினர். இதனால் விஜய் நெகிழ்ந்து போனார்.
மிரட்டி விட்ட தூத்துக்குடி மக்கள்
இதனைத் தொடர்ந்து விஜய் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அவர் பரப்புரை செய்யாமல் ரோடு ஷோ மட்டும் சென்றார். ஆனால் அதற்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மிரண்டு போகும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை இருந்தது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இனிமேல் இப்படி ஒரு கூட்டத்தை எந்தவொரு அரசியல் கட்சியாலும் கூட்ட முடியாது என தவெகவினர் சவால் விட்டு வருகின்றனர்.
பிளான் போட்டது இவரா?
இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விஜய்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கான காரணங்களின் பின்னால் அக்கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஜெயலலிதா காலக்கட்டத்தில் செங்கோட்டையன் தான் தேர்தல் பரப்புரைக்கான திட்டமிடுதலை மேற்கொள்வார். அப்படியான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பே நெல்லை வந்த செங்கோட்டையன் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் கூட முழுமையாக களப்பணியாற்றியுள்ளார். அவரின் திட்டமிடல் மற்றும் விஜய் மீதிருக்கும் மக்கள் அன்பு இணைந்தும் சேர்ந்து இப்படி ஒரு மாஸ் கூட்டம் சேர காரணமாக அமைந்துள்ளது என தவெக தரப்பில் தெரிய வந்துள்ளது.