உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. பணி நீக்க நடவடிக்கைகள் இந்தியாவில் இருக்காது என்றாலும், டிசம்பர் மாதத்தில் அதிகரித்து, பின்னர் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் தற்போது அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
டிசம்பர் மாதத்தில் 8.30 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், இந்தாண்டு ஜனவரியில் 7.14 சதவிகிதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த நிலையில், மார்ச் மாதத்தில் 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 26.8 சதவிகிதமாகவும், குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.8 சதவிகிதமாகவும், புதுச்சேரியில் 1.5 சதவிகிதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது.
பண்டிகை காலத்திற்குப் பிறகு, சில்லறை விற்பனை, விநியோகம், நிதி சேவை உள்ளிட்ட துறைகளில் பணியாளர்களுக்கான தேவை குறைந்ததே, வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. ஐ.டி. துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாகாததும், தேர்வுக் காலம் என்பதால் சுற்றுலாத் துறை தொய்வு அடைந்திருப்பதும், மற்ற காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
ஆனால், உட்கட்டமைப்பு, பொறியியல், கட்டுமானத் துறைகள் காரணமாகவே ஓரளவு வேலைவாய்ப்பு உருவாகி வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, விரைவில் இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வர அதிக வாய்ப்புள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாகும் என துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.