சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருப்பூர் நகரில், பல்லடம் சாலை, ராயபுரம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் மரம் முறிந்து, சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது விழுந்தது. கரட்டாங்காடு பகுதியில் செல்போன் டவர் முறிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதே போல, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், மைவாடி, ஜோதம்பட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சூறைக் காற்றுடன் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. கோவை – சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டினம், குந்தாரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தருமபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. இதனால், முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துக்குள் தண்ணீர் வழிந்து, பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே வீசிய சூறைக் காற்றில் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், திருநின்றவூர், சோழவரம் ஆகிய பகுதிகளிலும் புழுதிக் காற்று சுழன்றடித்தது. சாலையில் சூழ்ந்த தூசு படலத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. புறநகர் பகுதிகளில் திடீரென வீசிய காற்றால் ராட்சத கிரேன்கள் மூலம் நடைபெற்று வரும் அடுக்குமாடி கட்டட பணிகள் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கார்மேகங்களால், மாலை வேளையில் இருள் சூழ்ந்தது. மழை பெய்யாத போது, குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தணிந்தது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முன்னூர் கிராமத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். வயலில் இருந்து வீட்டிற்கு மாட்டை அழைத்து வந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.