கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப் போவதாகவும், மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்திற்கு தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் தற்போது தான் பதவிக்கு வந்துள்ளார். காவேரி பிரச்சனை முழுவதும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும்.
எந்த ரூபத்திலும் எந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சமரசத்திலும் மேகதாது அணை கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டுவது என்ற பேச்சு காவேரி நடுவர் மன்றத்தில் வரவில்லை. காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் இந்த பேச்சு வரவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.