ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து கோவை சரளா, ராய் லட்சுமி, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரமான திருநங்கை ரோலில் சரத்குமார் நடித்திருந்தார்.
இவருடைய நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இவருடைய மகள் கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருந்தார். இந்நிலையில், பிரியா அளித்த சமீபத்திய பேட்டியில் காஞ்சனா படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது,
‘காஞ்சனா படத்தில் நடித்தது தான் நான் செய்து மிகப்பெரிய தவறு. காஞ்சனா படத்திற்கு முன் நான் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். இப்படத்தில் நடித்ததால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். ஆனால், அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. வேறு வேலை கூட எதுவும் பார்க்க முடியவில்லை’ என திருநங்கை பிரியா பேசினார்.