இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அத்துடன் பன்னீரும் இருந்தால், அட்டகாசமான சுவையில் ஒரு கிரேவியை செய்யலாம்.
இந்த காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு காலிஃப்ளவர் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கறிப்பிலை – சிறிது
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு -1 டீஸ்பூன்
* மஞ்சுள் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* காலிஃப்ளவர் – 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் பால் – 150 மிலி
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் மூடி வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து ஒருநிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு காலிஃப்ளவர் சேர்த்து ஒருமுறை கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து, இறுதியாக தேங்காய் பாலை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி தயார்.