ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்…
சென்னையில் 2 ஆவது நாளாக இரவில் கனமழையால் பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நேற்று இரவு பெய்த மழையால் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் 2வது நாளாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகினர். அங்குள்ள இருசக்கர வாகன சுரங்கப்பாதை முற்றிலும் மூழ்கியதனால் கோடம்பாக்கம் பகுதியே தீவு போல் காட்சியளித்தது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் நேற்று இரவு மழை கொட்டித்தீர்த்தது.இதே போன்று, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், முகப்பேர், சைதாப்பேட்டை, கிண்டி, அம்பத்தூர், வில்லிவாக்கத்திலும் தொடர்ந்து மழை பெய்தது. கனமழையால், தியாகராய நகர் பசுல்லா சாலையில் மழைநீர் தேங்கியது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி ஜம்புலிங்கம் தெருவில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொரட்டூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குள் மூன்று அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதியுற்றனர். மேற்கு மாம்பலத்தில் பெரும்பாலான தெருக்களை மழைநீர் ஆக்கிரமித்தது. கே.கே.நகர், அசோக்நகரில் குளம் போல் சாலைகள் காட்சியளித்தன. கனமழையால், பெருங்களத்தூரில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. கீழ்கட்டளை அருகே மூவரசம்பட்டு ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. கீழ்கட்டளையில் மழைநீர் ஆறாக ஓடிய சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி கீழே விழுந்தார். மேடவாக்கம் விஜிபி பாபு நகர் பிரதான சாலையில் பூண்டு ஏற்றி சென்ற வாகனம் மழைநீரில் கவிழ்ந்தது. இதே போல், மேடவாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றோர் தவறி விழுந்தனர்.