உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் தான். மனித உடலில் இதயம் மிகவும் இன்றியமையாத உறுப்பு. இதயம் சீராக இயங்கினால் தான் மனிதன் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்
ஆனால் தற்போது நிறைய பேருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இப்படி இதயத்தில் ஏற்படும் அடைப்பை, கரோனரி இதய நோய் என்று அழைப்பர். இது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் தமனிகளில் ப்ளேக்குகள் உருவாகி இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையின் முதல் அறிகுறியே நெஞ்சு வலி தான். அதற்காக நெஞ்சு வலி வந்தாலே இதய நோய் என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம்.
நெஞ்சு வலி பல காரணங்களால் வரலாம். வாய்வு உடலில் அதிகமாக இருந்தாலும் நெஞ்சு பகுதியில் வலியை அனுபவிக்கக்கூடும். ஆனால் ஒருவர் அடிக்கடி நெஞ்சு வலியை சந்தித்தால், அப்போது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துவிட வேண்டும். அதுவும் நெஞ்சு வலியுடன் குறிப்பிட்ட அறிகுறிகளையும் சந்தித்தால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம்.
நமது இதயமானது ஏதாவது பிரச்சனையை சந்தித்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைக் கவனித்து உடனே சிகிச்சை பெறாவிட்டால், மாரடைப்புக்கு வழிவகுத்து உயிரையே பறித்துவிடும். இப்போது ஒருவரும் புறக்கணிக்கக்கூடாத சில இதய அடைப்பின் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம். அந்த அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்.
மிகுந்த உடல் சோர்வு
காரணமின்றி நீங்கள் மிகுந்த உடல் சோர்வை அனுபவிக்கிறீர்களா? அதுவும் இரவு நன்கு ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்ற பின்னரும் உடல் களைப்பாக இருக்கிறது என்றால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். இந்த மாதிரியான உடல் களைப்பானது உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுத்த பின்னரும் நீடித்திருக்கும். அதோடு எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். இப்படியான நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
தூங்குவதில் சிரமம்
தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார்கள். இப்படி இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பதை, பலரும் தூக்கமின்மை பிரச்சனையாக இருக்கலாம் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில சமயங்களில் இப்படி தூங்க முடியாமல் கஷ்டப்படுவது, உடலில் உள்ள ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதுவும் தொடர்ந்து நீண்ட நாட்களாக இப்படி தூங்குவதில் சிரமத்தை சந்தித்து, மூச்சுத் திணறல், அதிகமாக வியர்ப்பது போன்றவற்றையும் சந்தித்தால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம்.
மூச்சுத்திணறல்
சிறிது தூரம் நடந்தால் அல்லது மாடிப்படி ஏறினால், உங்களுக்கு அதிகமாக மூச்சு வாங்குகிறதா? அப்படியானால் உங்கள் இதயம் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று அர்த்தம். அதாவது, இதயத்தில் அடைப்பு இருப்பதைக் கூட அது உணர்த்தலாம். எனவே நீங்கள் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய நினைத்தால், சிறிது தூரம் வாக்கிங் செய்யுங்கள் அல்லது மாடிப்படி ஏறுங்கள். அப்போது அதிகமாக மூச்சு வாங்கினால், இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
விறைப்புத்தன்மை பிரச்சனை
ஆம், ஆண்களுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தால் வெளிப்படும் ஒரு அறிகுறி தான் விறைப்புத்தன்மை பிரசசனை. சொல்லப்போனால் இது ஆண்களுக்கு இதயத்தில் உள்ள அடைப்பை உணர்த்தும் ஒரு ஆரம்பகால அறிகுறி என்றே கூறலாம். ஏனெனில் ஆணுறுப்புக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் போனால் தான் விறைப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே ஒரு ஆண் இந்த ஒரு அறிகுறியைக் கொண்டே இதய பிரச்சனையை தெரிந்து கொள்ளலாம்.
அசாதாரண பகுதிகளில் வலி
உங்கள் தாடை, தோள்பட்டை, கை அல்லது முதுகு பகுதியில் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இதயத்தில் ஏதோ ஒரு தீவிரமான பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்த இடங்களில் எல்லாம் வலியை சந்தித்தால், அதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இந்த வலிகள் அனைத்தும் இதயம் உங்களுக்கு வெளிப்படுத்த நினைக்கும் அறிகுறிகளாகும்.