தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் சிவி சண்முகம் ஆதரவு அதிமுக எம்எல்ஏ-க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தவெக-வின் அமைச்சரவை இன்று மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலே முதன்முறையாக தமிழக அரசின் அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் இடம்பிடித்துள்ளனர்.
அதிமுக-வுக்கு குட்பை சொன்ன விஜய்:
தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம் என்ற சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்களின் நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தயவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க அதிமுக முயற்சித்தாக சிவி சண்முகம் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்து இபிஎஸ் தலைமைக்கே மிகப்பெரிய ஆபத்தை உருவாக்க முயற்சித்தனர்.
எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து தவெக-விற்கு சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் ஆதரவு தெரிவித்ததே விஜய்யின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலே ஆகும். ஆனால், விஜய் அமைச்சரவையில் தற்போதே 35 அமைச்சர்கள் இருப்பதால் இனி அமைச்சரவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை.
ரூட்டை மாற்றப்போகும் எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏ-க்கள்:
மேலும், அதிமுக-வினருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கினால் தாங்கள் கூட்டணியில் நீடிக்கமாட்டோம் என்று விசிக, கம்யூனிஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாகவும், திமுக – அதிமுக-விற்கு மாற்று தவெக என்பதை மக்கள் மத்தியில் ஆழமாக கொண்டு செல்லவும் சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவில்லை.
இந்த சூழலில், சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியை தேவையில்லாமல் எதிர்த்துவிட்டோமோ? என்ற குழப்பத்தில் உள்ளனர். அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட முடிவு என்ன எடுக்கலாம்? என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இபிஎஸ் பக்கம் தாவ தயார்:
எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தரப்பினருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று எடப்பாடி பழனிசாமி பக்கமே தாவிவிட அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை மட்டுமே சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தரப்பினர் அளித்திருந்தனர். ஆனால், தற்போது அது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொதுக்குழுவை கூட்ட சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தரப்பினர் காய் நகர்த்தி வரும் சூழலில் தற்போதைய சூழலில் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் பல மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ள நிலையில், மீண்டும் அவரிடம் இணைந்து பதவியைப் பெறவும் முடிவு செய்துள்ளனர். சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தரப்பினர் தங்களுக்கு எதிராக சூழல் இருப்பதால் தற்போது மயான அமைதியில் உள்ளனர்.