ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்- விசிக
ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே என்று விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி சாடியுள்ளார். விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி.யும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தவெக அரசில் இடம்பெற்ற விசிக, ஐயூஎம்எல்
ஆளும் தவெக அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த விசிக, எதிர்பாராத விதமாக தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஷாஜஹான், தமிழ்நாட்டு அரசின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
முகம் சுளிக்க வைத்த ஆ.ராசா
இந்த நிலையில் இதனை விமர்சித்து ஆ.ராசா முகம் சுளிக்க வைக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!
பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!” என தெரிவித்திருந்தார். இது விசிக கட்சியினர் பெண்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கிடையில், விசிக பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ’’அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?
ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது, அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து, அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்’’ என்று எஸ்.எஸ்.பாலாஜி சாடி உள்ளார்.
அதேபோல விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் எம்.பி. திருக்குறள் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்
‘’இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது”
அதாவது, “இனிய சொற்கள் தனக்கு இன்பம் தருவதை உணர்ந்து அறிந்த ஒருவன், அதையெல்லாம் விட்டுவிட்டுப் பிறரிடம் கடுஞ்சொற்களைப் பேசுவது எதனால்? என்ன பயன் கருதி? என்று அர்த்தம் கொண்ட குறல் இதுவாகும்.