TVK cabinet IUML : தமிழகத்தில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இணைவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரம் திமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா.? என காதர் மொய்தீன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்றிய தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரம் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து முதல் ஆளாக திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் தவெக அணிக்கு தாவியது. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது. அதே நேரம் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது.
அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இணைய மறுப்பு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆலோசனை செய்து அறிவிப்பதாக கூறியது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன், தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
அமைச்சரவையில் ஐயூஎம்எல்க்கு அழைப்பு
இதனையடுத்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தவெக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் பிரிவு தலைவர் கேரளாவில் உள்ளார். அவரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமைச்சரவையில் முஸ்லிம் லீக் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் எம்எல்ஏ யார் என ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜகான் அமைச்சரவையில் இடம்பெறுவார் என முடிவு செய்யப்பட்டதாக கூறினார். மேலும் இரண்டு அமைச்சரவை இடங்கள் வேண்டும் என தவெகவிடம் கேட்க இருப்பதாகவும் கூறினார். தவெக ஆட்சி சிறப்பாக வரலாறு படைக்க வேண்டும் என வாழ்த்தி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக காதர் மொய்தீன் கூறினார்.
திமுக கூட்டணி முறிவா.?
அடுத்தாக திமுக கூட்டணியில் தொடர்கிறார்களா.? என்ற கேள்விக்கு அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் இன்று காலையில் பேசினோம். அப்போது எங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் என ஸ்டாலின் கூறியதாக குறிப்பிட்டார். கூட்டணி பற்றி பேசவில்லை. இது தேர்தல் காலத்திற்கான முடிவு இல்லை. ஆட்சியில் பங்கேற்பதற்கான முடிவு என கூறினார். எதிர்கட்சியாக திமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் போது அதில் முஸ்லிம் லீக் பங்கேற்குமா.? என்ற கேள்விக்கு அமைச்சரவையில் இடம்பிடித்த பிறகு அரசுக்கு ஆதரவாகத்தான் இருக்க முடியும்.
உள்ளாட்சி மன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.?
எப்படி போராட்டங்களில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுப்பினார். உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் நிலைப்பாடு தொடர்பாக அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். தவெக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தால் இணைந்து கொள்வீர்களா.? என்ற கேள்விக்கு அமைச்சரவையில் இணைய தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என காதர் மொய்தீன் தெரிவித்தார்.