CM Vijay 52nd Birthday: முதலமைச்சரான பிறகு விஜய் முதல்முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
CM Vijay 52nd Birthday: முதலமைச்சர் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், வாக்குறுதி அளித்தபடி சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுமா? என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
முதலமைச்சர் விஜயின் 52வது பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்து கட்சி ஆரம்பித்த சுமார் இரண்டு ஆண்டுகளிலேயே, மாநிலத்தின் முதலமைச்சராக விஜய் உருவெடுத்துள்ளார். தமிழ்நாட்டின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் இருந்தபடி, தனது முதல் பிறந்தநாளை இன்று அவர் கொண்டாடுகிறார். அவரது 52வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, கட்சி சார்பில் பல்வேறு நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் உணவு வழங்குவது, ரத்த தானம் மேற்கொள்வது, மருத்துவ முகாம்களை நடத்துவது என பல்வேறு நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களும் நடத்தப்படுகின்றன.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
சட்டப்பேரவை நடவடிக்கைகள் நடைபெறும் நிலையில், முதலமைச்சராக விஜய் தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதன் காரணமாக தேர்தலின் போது அளித்த பல முக்கிய வாக்குறுதிகள் தொடர்பான அதிரடியான அறிவிப்பு ஏதேனும் இன்று வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை, மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான கட்டணமில்லா சுகாதாரக் காப்பீடு திட்டம், மலிவு விலை மருந்துகள் மற்றும் ரூ.20 லட்சம் வரையிலான பிணையில்லா கல்விக் கடன் என தேர்தலின் போது கவனத்தை ஈர்த்த பல முக்கிய அறிவிப்புகள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலையை கருத்தில் கொண்டு மிகப்பெரிய செலவினங்களை கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், அதேநேரம் மக்கள் நலன் மற்றும் நேரடியாக பலன் பெறக்கூடிய முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை நேரலை வருமா?
கடந்த வெள்ளிக்கிழமை அன்று காவிரியில் மேகதாது அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிரான முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீதான விவாதம் முடிவுற்றதுமே நேரலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பரப்புரையின் போது தவெக ஆட்சி அமைந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதுமாக நேரலை செய்யப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. திங்கட்கிழமை முதல் இந்த பிரச்னை சரி செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படுமா?முதலமைச்சரும் நேரடியாக விவாதத்தில் கலந்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிப்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை போன்று சட்டமன்றத்திலும் விஜய் கர்ஜிக்க வேண்டும் என்பதே இளைஞர்கள் மற்றும் தவெகவின் இளம் ரத்தத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.