அண்ணண் பவருக்கு வந்ததால், தமிழ்நாட்டிற்கே பவர் போய்விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் பேச்சு
விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளதாக சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நக்கலடிக்கும் விதமாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பவர் போய்விட்டது
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது மின்வெட்டு தொடர்பாக பேசும்போது, முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் விதமாக பேசினார். அண்ணன் பவருக்கு வந்தால் மாற்றம் வரும் என்றார்கள்; ஆனால், தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என்று பேசினார். மேலும், விஜய் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டில் நம்பர் 1 தொகுதியாக பெரம்பூரை மாற்றியுள்ளதாக கூறினார். மேலும், தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதா? என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்வெட்டுக்கு காரணம் என்ன? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
மின்சாரத்துறையில் இரண்டரை லட்சம் கோடி இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த துறையில் எந்த கட்டமைப்புகளும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அந்த அறிக்கையில், மின்சாரத்துறையில் எத்தனை ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர் என்பது பற்றி இருக்கும். இந்த துறையில் 70 ஆயிரம் பணியிடங்கள் இருக்கிறது. கடந்த பத்து நாட்களில் இதனை எல்லாம் சீரமைக்க 125 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக்குழுக்கள் எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளதோ, அதனை சரி செய்து விடுகிறது. மின்வெட்டு தொடர்பாக பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டு வைக்கக்கூடாது. எங்கெல்லாம் ஃபியூஸ் திருடப்பட்டதோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு நாளும் 55 இடங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதில் 35 இடங்களில் சரிசெய்யப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் விளக்கம்
கடந்த 5 ஆண்டுகளில் சீரான் மின் விநியோகத்திற்கு 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் பெரும்பான்மையாக முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.கடந்த 5 ஆண்டுகளில் புதிதாகவும், பழுந்தடைந்த என 90 ஆயிரம் மின்மாற்றிகள் மாற்றி சீரமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கும்போது, அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ரீதியாக சரிசெய்வது அரசு உடைய கடமை ஆகும். ஒரு அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக அந்த துறையுடைய அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி என்னென்ன குறைபாடுகள் உள்ளன. அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது அரசுடைய கடமை, துறையுடைய கடமை. எனக்கு தெரிந்தவரை இதுவரை மின்துறையில் அதிகாரிகளின் கூட்டம் நடைபெறவில்லை. இதேயேதான், அங்கு பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள். இப்போது இருக்கக்கூடிய பணியாளர்களை வைத்துதான் கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்தை கொடுத்தோம். எனவே கடந்த காலங்களில் இருக்கக்கூடிய குறைகளை தொடர்ச்சியாக ஒரே கருத்துகளை முன்வைப்பதைவிட, இந்த அரசு துறையின் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி சீரான மின் விநியோகம் செய்ய இந்த அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், 90 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதில், 40 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.