CM Vijay Assembly Speech: கடந்த 2017 தொடங்கி 2026 ஏப்ரல் மாதம் வரை ஆண்ட புண்ணியவான்களின் ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்துக்கொண்டு இருப்பதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
CM Vijay Assembly Speech: தவெக ஆட்சிக்கு தேதி குறிப்பவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என, முதலமைச்சர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் உரை:
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், “பல வருடங்களாக இருக்கும் பதவி வெறி பிடித்த அரசியலை உடைத்து இந்த விஜய் எப்படி செயல்படுவார் என நமது மக்களே சிந்தித்து இருப்பார்கள். ஆனால் அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என மக்கள் 40 நாட்களில் அறிந்து இருப்பார்கள். இது வெறும் தொடக்கம் மட்டும் தான். மாபெரும் சபையில் இருந்து கேட்கிறேன், மக்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். 2017ம் ஆண்டு கடைசியில் இருந்து 2026 ஏப்ரல் மாதம் வரை ஆண்ட இருந்த புண்ணியவான்களின் ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் போட்ட ஓட்டைகளை அடைத்துக்கொண்டே, படிப்படியாக மக்களுக்கும் நல்லது செய்துகொண்டு வருவோம். இதனால் தான் நமக்கு எதிராக யார் யாரும் சேரவே மாட்டார்கள் என நினைத்தோமோ, அவர்கள் எல்லாம் ஒன்றாக சேருகின்றனர். நம்ம ஆட்சிக்கு தேதி குறிக்கிறார்கள். அவர்களை மக்களே பார்த்துக்கொள்வார்கள்.
திமுகவால் தொல்லையோ தொல்லை..
தமிழ்நாட்டின் கருவூலம் எப்படி திசைமாறி, உருமாறி தேய்ந்து ஓய்ந்து என வசனம் மாதிரி ரைமிங்காக இல்லாமல் வளமான இலக்கியமாக இதே சபையில் பேசிய ஆட்சியாளர்கள் நடத்திய நிதிமேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். அதுமுதல் கண்ணை கட்டுதிங்க. அந்த காலத்தில் தான் பிள்ளையோ பிள்ளை, தொல்லையோ தொல்லை என சொன்னார்கள். அதே மாதிரி தான் அவர்களுடைய ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு தொல்லையோ தொல்லை. இப்படி ஒரு நிலைமையை உருவாக்கி வைத்துவிட்டு இவர்கள் சொல்கிறார்கள் நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று.
”தவெக எம்.எல்.ஏக்களுக்கு தெரியாதுங்க..”
நமது அமைச்சர்களுக்கும், நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் தெரியாது என சிலர் விமர்சிக்கின்றனர். ஆமாங்க, எங்களுக்கு தெரியாது தான். எங்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது தான். டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு அதன் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்ய தெரியாது தான். பதவி உயர்வு வழங்கவும், பணியிட மாற்றம் கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர அதற்காக பணம் பறிக்க தெரியாது தான். பணியிடங்களை உருவாக்க தெரியுமே தவிர, அவற்றை பணத்திற்கு விற்க தெரியாது தான். கோயில்களில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டை நடக்க தெரியுமே தவிர, கோயில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது தான். தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது தான். கனிம வளத்தை பாதுகாக்க தெரிந்த அளவிற்கு, கொள்ளையடிக்க தெரியாது தான். அரசு வருமானத்தை அரசு கஜானாவிற்கு மாற்ற தெரிந்த அளவிற்கு தனிப்பட்ட கஜானாவிற்கு மாற்ற தெரியாது தான். போதை கலாசாரத்தை தடுக்க தெரிந்தவர்களுக்கு, அதை வளர்க்க தெரியாது தான். குடும்பத்தில் இருக்கும் பெண்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு ஒசி பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ் இப்படி எல்லாம் பேச தெரியாது தான்.
மக்கள் சேவை தெரிந்த அளவிற்கு சுயநலத்திற்காக உழைக்க தெரியாது. அதனால் தான் எங்களை பார்த்து எதுவும் தெரியாது என சொல்பவர்களுக்கு சொல்கிறோம். உங்களை போன்று முறைகேடு செய்வதை நாங்கள் தெரிந்துகொள்ள போவதில்லை. தெரிந்துகொள்ள ஆசைபடவும் இல்லை. அது கடைசி வரையில் தெரியாமலே இருக்கட்டும். அதனால் நாங்களும் எங்கள் மக்களும் ரொம்ப மகிழ்ச்சி தான்” என முதலமைச்சர் விஜய் சரமாரியாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்தார்.