CM Vijay First Assembly Speech: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசிய விஜய், சபாநாயகர் பதவி தொடர்பாக குட்டிக்கதையை சொல்லி கவனத்தை ஈர்த்தார்.
CM Vijay First Assembly Speech: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசிய விஜய், சபாநாயகர் பதவி தொடர்பாக சொன்ன குட்டிக்கதை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முதல் உரை:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவிகுமார் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இந்த பதவியை ஏற்றபிறகு அவர் நிகழ்த்திய முதல் உரை இதுவாகும். அப்போது பேசுகையில்,”மக்களே மக்களுக்காக மக்களால் செய்துகொள்ளும் ஆட்சி மக்களாட்சி என்றார் ஆபிரகாம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி அமைவதற்கு மக்களிடையே நிலவும் பெரும் எதிர்பார்ப்பு காரணமாகும். அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இந்த பேரவைக்கு கொண்டு வந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சியில் பெற்றுள்ளார்கள் என்ற நிலையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கு இடம்பெற்று இருந்தாலும் அவர்களது கருத்துகளுக்கும், அதிக எண்ணிக்கையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பு அளிக்கப்படும். அவற்றில் நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்த பேரவை செயல்பட வேண்டும்.
குட்டிக்கதை சொன்ன முதலமைச்சர் விஜய்
பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகரை, பேரவையின் முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர். இந்த நடைமுறை சுவாரஸ்யமானது. பெரிய வரலாறே இந்த சம்பவத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறையும் உள்ளது. மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்கு பாராளுமன்றம் இயங்கி உள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்த மன்னரும் அங்கு இருந்தார். பாராளுமன்றமும் இயங்கியது. அங்கு மன்னர் ஒரு பணியை செய்ய விரும்பினாலும், பாராளுமன்றம் அதை பெரும்பாலும் நிராகரிக்கும். இந்த தகவலை மன்னருக்கும் தெரிவிக்கும் பொறுப்பு பாராளுமன்ற சபாநாயகருக்கு தான் இருந்தது.
”தலை தப்பித்தால் போதும் என ஓடுவார்கள்”
பாராளுமன்றத்தின் முடிவை மன்னரிடம் சொல்ல துணிவு வேண்டும். சில பணிகளை செய்வதற்கு தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர. அந்த ராjஜியத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு இருந்தது. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்ற தகவலை சொல்லும் சபாநாயகருக்கு மரண தண்டனை விதிக்கும்படி மன்னர் ஆணையிடுவார். தலையை வெட்டிவிடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே சபாநாயகர் பதவியை பெற விரும்பமாட்டார்கள். எனவே, புதியதாக பாராளுமன்றம் அமையும்போது சபாநாயகர் பதவிக்கு அறிவிக்கப்படும் நபர், தலை தப்பித்தால் போதும் என ஓட்டம்பிடிப்பார். அந்த நேரத்தில் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் ஓடுபவரை தடுத்து நிறுத்தி கைகளை பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமரவைப்பர். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறையிலும் இந்த நடைமுறை தொடர்கிறது. தவெக உறுப்பினர்கள் அனைவரும் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள் என வாக்குறுதி அளிக்கிறேன்” என முதலமைச்சர் விஜய் சொல்லி முடிக்க அவை முழுவதும் சிரிப்பலை பரவியது.பலரும் மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.