DMK ELECTION PLAN: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், வரும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களம் இறங்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தேர்தல் முடிவு- தமிழக அரசியலில் திடீர் திருப்பம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகளுக்கிடையே மட்டும் போட்டி ஏற்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அதே நேரம் தவெக ஆட்சி அமைக்க 12 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுக அதிர்ச்சியில் உள்ளது.
கொள்கை கூட்டணி- ஒரே தேர்தலில் பிரிந்தது
திமுக ஓட்டுக்கள் மூலம் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகள் தற்போது திமுகவிற்கு எதிராக நிலைப்பாட்டில் இருப்பதால் இனி கூட்டணியே இல்லாமல் தேர்தலில் போட்டியிட வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கொள்கை கூட்டணி என கூறி வந்த கூட்டணி கட்சிகள், கடந்த 9 ஆண்டுகளாக அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், ஒரே ஒரு தேர்தலில் தோல்வி அடைந்ததால் கூட்டணியில் இருந்து பல்டி அடித்திருப்பது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே வரும் காலங்களில் திமுகவினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கூட்டணி இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி தேவையில்லை- ஆ.ராசா
இதற்கு ஏற்ப இன்று திருவாரூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, கூட்டணி இனிமேல் யாருடனும் இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் தனியாகத்தான் நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் பேசுகையில், இங்கே நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் ஆ. இராசா பேசுகிறபோது, கூட்டணி பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். எப்போதுமே கலைஞர் அவர்கள் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களாகத்தான் செல்வார்களே தவிர, கலைஞர் இதுவரை விட்டது கிடையாது.
கூட்டணியே தேவை இல்லை – ஸ்டாலின்
அதேபோன்றுதான் நானும் அவர் வழி நின்று, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். ஆனால் அவர்களாகச் சென்றால், நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை. ஆனால் இன்றைக்கு இருக்கும் மக்கள் எல்லாம், கூட்டணியே தேவை இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளார். எனவே விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லாமல் திமுக தங்களது வாக்கு வங்கியை என்ன என்பதை சோதிக்கும் வகையில் தனித்து களம் இறங்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.