TVK DMK: தவெக எம்.எல்.ஏக்களை பேரம் பேச முயன்றதற்கு பதிலடியாக தான், எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
TVK DMK: டெண்டர் முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு மற்றும் நிறுவனங்கள் என அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 4 மாவட்டங்களில் சாலை அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் காலை முதல் எ.வ. வேலுவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறதாம். அதோடு, தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதற்கு பதிலடி தரும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பனையூர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக MLA-க்களை குறிவைத்த திமுக..!
தவெக ஆட்சி அமைந்ததை திமுக தரப்பால் குறிப்பாக உதயநிதி ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்ற தகவல் அறிவாலயம் வட்டாரங்களில் இருந்து தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. இதற்காக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர பல அதிரடி திட்டங்களை எதிர்க்கட்சியினர் அடுத்தடுத்து முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது எனவும், இதற்காக தவெகவில் அதிருப்தியில் உள்ள சில எம்.எல்.ஏக்களை குறிவைத்து வாங்குவது எனவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வேலையை கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அவரது சகோதரரும் முன்னெடுத்தனராம்.
போட்டுக்கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட்..
அமைச்சர் பதவி கிடைக்காமலும், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காமலும் அதிருப்தியில் உள்ள, சுமார் 10 தவெக எம்.எல்.ஏக்களை கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் சகோதரர் கையில் இனிப்பு பெட்டிகளுடன் அணுகும் பணியில் தீவிரமாக இருந்துள்ளார். அதேநேரம், உளவுத்துறையை கொண்டு திமுக வட்டாரத்த்தை தீவிரமாக கண்காணித்து வரும் முதலமைச்சர் செவிக்கு இனிப்பு பெட்டி விவகாரங்கள் தெரிய வந்துள்ளன. உடனடியாக அந்த பெட்டிகளுடன் சுற்றி திரியும் நபரை தூக்க உத்தரவிட்டுள்ளார். இதையறிந்து உடனடியாக அந்த தம்பி தலைமறைவாக, சபாராயருக்கு போட்ட மொத்த ஸ்கெட்ச்சும் வீணாய்போனதே என குறிஞ்சி இல்லம் தரப்பு நொந்துபோனதாம். தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அதகளப்படுத்தலாம் என்ற உதய் தரப்பின் திட்டமும் வீணாய்போனதாம்.
பதிலடி தர ஆளும் தரப்பு முடிவு:
ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்தாலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால் ஆளுநரின் அனுமதி அவசியமாக உள்ளது. இதன் காரணமாக திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பூர்வாங்க விசாரணை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம். வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், மாஜிக்கள் மீது வழக்கு பதிய ஆளுநரின் அனுமதி கோரலாம் என முடிவு செய்து இருந்தாராம். ஆனால், தவெக எம்.எல்.ஏக்களை குறிவைத்து திமுக முன்னெடுத்த திட்டங்களை அறிந்ததும், தாமதமின்றி திமுகவிற்கு பதிலடி தர வேண்டும் என்றே, திமுக தலைவர் ஸ்டாலினின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எ.வ. வேலுவின் வீட்டிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை களமிறக்கப்பட்டுள்ளதாம்.
கலகத்தில் முன்னாள் அமைச்சர்கள்..
ஏற்கனவே ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்துள்ளது. இதனிடையே, நிலக்கரி கொள்முதல் தொடர்பான ஆவணங்களை ஆய்வுசெய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளதாம் ஈரப்பதம் அதிகமுள்ள நிலக்கரியை அதிக அளவு விலை கொடுத்து கொள்முதல் செய்ததாகப் புகார் எழுந்திருக்கிறது. அது குறித்து, மின்சாரத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனராம். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவும், நகராட்சி நிர்வாகத்துறை முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டுவிட்டதால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் கலக்கத்தில்தான் இருக்கிறார்கள். இதேபோன்று பல முன்னாள் அமைச்சர்களின் பட்டியலும் தயாராகி வருகிறதாம்.
விஜயின் இலக்கு..
திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வரும்போது எதிர்தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தாலும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்தன. அதுபோல இல்லாமல் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக உள்ளாராம். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கவனத்தை வழக்குகள் மீது திருப்பி, அரசு நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை தீர்த்து பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னெடுக்க விரும்புகிறாராம். நிதி சிக்கல் காரணமாக அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்கிறது. எனவே நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் மூலமும், ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கைகள் மூலமாகவும் மக்கள் மனதை வெல்ல முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளாராம்.