அதிமுக-வில் தற்போது உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல்வேறு அரசியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஆளுங்கட்சியாக தவெக-வும், எதிர்க்கட்சியாக திமுக-வும் அமர்ந்துள்ள நிலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அதிமுக-வில் பூகம்பமே வெடித்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக:
எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக சென்ற பிறகு, இதுவரை சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிருப்தியை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக-வின் 47 எம்எல்ஏ-க்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர். சசிகலா, தினகரனை விரைவில் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பறிபோகிறதா பொதுச்செயலாளர் பதவி?
விரைவில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் இருப்பதால் அவரது பொதுச்செயலாளர் பதவி தப்புமா? சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவாரா? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.
இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்த சிவி சண்முகம் அதிமுக-வில் பிளவு ஏதும் ஏற்படவில்லை, எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச்செயலாளர் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தாலும், திமுக ஆதரவில் ஆட்சியமைக்க நினைத்த இவரெல்லாம் பொதுச்செயலாளரா? என்று கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
இனி வரும் நாட்களில் அதிமுக-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதியாகும். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட்டால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் குறையும். தனக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் செயல்படுவதால் எடப்பாடி பழனிசாமி அதை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பொதுச்செயலாளர் பதவியை தக்கவைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கட்சியின் மற்ற நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படுவாரா? சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் சேர ஒப்புக்கொள்வாரா? சசிலகாவும், தினகரனும் கட்சியில் இணைவது என்றால் அவர்கள் தொடங்கிய கட்சியை கலைப்பார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தற்பாேது மிகவும் நெருக்கடியான காலகட்டம் அதிமுக-வில் ஏற்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது.