அரசுப் பதவியில் ஜோதிடர் நியமனம்; மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதா?- தவெக அரசை வெளுத்து வாங்கிய விசிக
’’தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு அறிவித்துள்ளார். அதேநேரத்தில் ஜோதிடம் என்னும் மூட நம்பிக்கைக்கு அரசு செவிசாய்த்து விடக்கூடாது என்றும் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மே 13ம் தேதிக்குள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்கெடுப்பின் மீது சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏ வன்னி அரசு பேசியதாவது:
’’விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு பொறுப்பேற்றுள்ள இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என நம்புகிறேன். அதற்காக தவெக அரசுக்கு வாழ்த்துகள்.
பாஜகவின் மறைமுக செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சியை தடுக்கும் வகையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
மாநில உரிமைகளில் சமரசம் கூடாது
ஒன்றிய பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறை சதியை, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் எப்படி ஒன்றிணைந்து எதிர்த்து வெற்றி பெற்றனவோ, அதேபோல் மாநில உரிமைகளுக்காக இந்த புதிய அரசும் எந்தவித சமரசமும் இல்லாமல் உறுதியோடு செயல்பட வேண்டும்.
ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு இந்த அரசு இடம் கொடுக்க கூடாது.. அறிவியல் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல மூட நம்பிக்கைக்கு எதிராகச் சட்டம் கொண்டுவர வேண்டும்.
ஆணவக் கொலை சிறப்பு தடுப்புச் சட்டம்
வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே ஆணவக் கொலைகள் தலைதூக்கி உள்ளன. இவற்றைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஏற்கெனவே திமுக அரசு கொண்டுவந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு விசிக சட்டமன்றக் குழு தலைவர் வன்னி அரசு தெரிவித்தார்.