திமுக-வில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் வரும் 31ம் தேதிக்குள் கருத்துக்களை பகிருமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆட்சியில் இருந்த திமுக-வும், முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக-வும் படுதோல்வியைச் சந்தித்தது. யாருமே எதிர்பாராத வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
படுதோல்வி அடைந்த திமுக:
இந்த தேர்தல் தோல்வி திமுக-வை நிலைகுலைய வைத்துள்ளது. மொத்த தேர்தல் தோல்வியையும் சரி செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை மொத்த திமுக-வையும் சீர் செய்ய மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதற்காக சிறப்பு இணையதளத்தையும் அவர் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, அன்பு உடன்பிறப்புகளே,
http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
பொதுமக்களும் கருத்து கூறுங்கள்:
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை http://udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த கருத்துக்களின் முடிவின் அடிப்படையில் திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக, பல நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து நீக்கவும் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், இனி வரும் நாட்களில் மூத்த தலைவர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு சுறுசுறுப்பான நிர்வாகிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.