TVK Vs DMK: ராயல் என்ஃபீல்ட் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றது தொடர்பாக, திமுகவினர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
TVK Vs DMK: கடந்த திமுக அரசின் இயலாமையை தவெகவின் மீது அறிவாலயம் தரப்பினர் எழுதி வருவதாக, ஆளுங்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொழில் முதலீடுகளை தவறவிடும் தவெக?
சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து கடந்த 10ம் தேதி தவெக ஆட்சி அமைக்க, விஜய் முதலமைச்சரானார். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே பல முக்கிய முதலீட்டு திட்டங்களை தமிழ்நாடு அரசு, அண்டை மாநிலத்திற்கு தாரை வார்த்துவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர். குறிப்பாக 15 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான போர் விமான திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர மூன்று வருடங்கள் போராடியதாகவும், ஆனால் அந்த திட்டம் தற்போது ஆந்திராவிற்கு சென்று விட்டதாகவும் முன்னாள் தொழில்வள அமைச்சர் டிஆர்பி ராஜா வேதனை தெரிவித்தார். அதுபோக, இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே உற்பத்தி பணிகளை செய்து வந்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், தற்போது 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆலையை ஆந்திராவில் அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கும் தவெக அரசு தான் காரணம் என விமர்சிக்கின்றனர்.
தவெகவை கடுமையாக சாடும் திமுக..!
இரண்டு முக்கிய முதலீடுகளும் வெளியேறியதற்கு தவெகவின் நிர்வாகத்திறமையின்மையே காரணம் என திமுகவினர் களமாடி வருகின்றனர். இதுபோக, திமுக ஈர்த்த முதலீடுகளை தவெக அரசு கைவிடுகிறது, தொழில்துறை முதலீடுகள் தொடர்ந்து பறிபோகிறது, மைனாரிட்டி ஆட்சி என்பதால் தொழில்நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தவே தயங்குகின்றன, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகிறது, அலட்சியமாக இருக்கும் அமைச்சர் கீர்த்தான என குற்றச்சாட்டுகளை அடுக்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல்கள் திமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு நேர் எதிராக உள்ளன.
ரூ.15,803 கோடி முதலீடு பறிபோனது யாரால்?
திமுகவின் கையாலாகத தனத்தை தவெகவின் தலையில் கட்ட முயற்சிப்பதாக ஆளுங்கட்சியினர் பதிலடி தந்து வருகின்றனர். குறிப்பாக ”எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ, அது நடந்துவிட்டது” என டிஆர்பி ராஜா தனது பதிவினை தொடங்கியதன் மூலம், தவெக ஆட்சியால் தான் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாடு இழந்தது என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் தான் இந்த திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியான நிலையில், 3 ஆண்டுகளாக ரத்தம் சிந்தி உழைத்ததாக கட்டுக்கதைகளை முன்னாள் அமைச்சர் அவிழ்த்து விடுகிறார் என காட்டமாக தவெகவினர் பதிலடி தந்து வருகின்றனர். இதுபோக கடந்த வாரம் புட்டபர்த்தியில் அடிக்கல் நாட்டு விழாவே நடைபெற்றுள்ளது. அதாவது திட்டத்திற்கான நிலத்தை தேர்வு செய்வது, அதை கையகப்படுத்தி DRDO விடம் ஒப்படைப்பது, அதன் பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது என அனைத்து பணிகளுமே முடிந்துள்ளன. திட்டம் ஆந்திராவிற்கு தான் என கடந்த 7ம் தேதியே ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படியானால் இந்த திட்டம் தமிழகத்திற்கு இல்லை என்பது திமுக ஆட்சியிலேயே தெரிந்திருக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில் இந்த செய்தி வெளிவந்தால் விமர்சனம் வரும் என்று மறைத்து விட்டு, டி ஆர் பி ராஜா இப்போது வந்து நாடகமாடுகிறார் என தவெகவினர் சரமாரியாக பதிலடி தந்து வருகின்றனர்.
ராயல் என்ஃபீல்டின் ரூ.2,500 கோடி முதலீடு
அடுத்ததாக இதுநாள் வரை தமிழ்நாட்டில் மட்டுமே உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், அண்டை மாநிலமான ஆந்திராவின் தடா பகுதியில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கானவே ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் முன்மொழிந்த திட்டத்திற்கு, கடந்த 6ம் தேதி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார். அதவாது விஜய் முதலமைச்சராவதற்கு 4 நாட்களுக்கு முன்பாகவே இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே கடந்த 18ம் தேதி இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. எனில் இந்த திட்டமும் தமிழ்நாட்டிற்கு இல்லை என திமுக ஆட்சியிலேயே அறிந்திருந்தும் இப்போது வந்த அறிவாலயத்தினர் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடுவதாக தவெகவின் சாடி வருகின்றனர்.
”பொய்களை அடுக்கும் திமுக”
இப்படி திமுக ஆட்சியின் கையாலாகததனத்தால் தான் பாதுகாப்புத்துறை மற்றும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆகியவற்றின் முதலீடுகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியுள்ளன. ஆனால், கொஞ்சமும் கூச்சமின்றி மொத்த பொய்களையும் தற்போது தவெக ஆட்சி மீது சுமத்தி வருகின்றனர் என விர்ட்சுவல் வாரியர்ஸ் விளக்கம் அளித்து வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தபோது பொய்களை அடுக்கி, விளம்பரங்களை மட்டுமே ஆட்சி செய்து மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை சீரழித்த திமுக, தற்போது தனது பாவங்களை வேறொருவரின் தலையில் கட்டப்பார்ப்பதாகவும் தவெகவினர் தெரிவிக்கின்றனர். பிறந்த குழந்தை உடனே நடக்கவில்லை என்பது போல, புதியதாக அமைந்த ஆட்சியின் மீது வன்மங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. உரிய நேரத்தை எடுத்துக்கொண்டு தவெக தலைமையிலான அரசு அனைத்து பிரிவுகளுக்குமான சீரான அரசாக செயல்படும் எனவும் பனையூர் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.