எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

150 0

அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம்.

எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காகவே, டிடிவி மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு உடனடியாக செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

பலனளிக்காமல் போன செங்கோட்டையனின் கெடு

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை எனில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன்” என திட்டவட்டமாக தெரிவித்தார். இது அதிமுகவில் புதிய புகைச்சலை ஏற்படுத்தியது. செங்கோட்டையனுக்கு பல முன்னாள் அமைச்சர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்பட்டது. அதுபோக தென்மாவட்டங்களில் சமூக வாக்கு வங்கியை உறுதிபடுத்த ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என கருதி, பாஜகவும் செங்கோட்டையனுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.

தூக்கி அடித்த எடப்பாடி

கட்சியில் மூத்த தலைவரால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை எடப்பாடி எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சற்றும் தாமதிக்காமல் கட்சியில் செங்கோட்டையன் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் எடப்பாடி பறித்தார். அவரது ஆதரவாளர்களும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் மூலம், நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை ஈபிஎஸ் உறுதி செய்தார். கட்சியின் ஒரே தலைமை தான் மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்தினார். அதோடு நிற்காமல் நேரடியாக டெல்லிக்கே சென்ற எடப்பாடி, கூட்டணி குறித்து பேசும்போது சொன்னபடி, பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை பாஜக தலைமையிடமும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு என்பது அவருக்கே ஆபத்த்தானதாக மாறியது.

எல்லா பக்கமும் அணை கட்டிய எடப்பாடி

செங்கோட்டையனின் பதவியை பறித்ததன் மூலம், சீனியர் மற்றும் ஜுனியர் என்றெல்லாம் பார்க்கமாட்டேன் என்பதையும், தனது தலைமையை ஏற்காவிட்டால் கட்சியில் ஓரங்கட்டப்படுவார்கள் என்பதையும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி உணர்த்தியுள்ளார். பாஜகவிற்கும் தனது நிலைப்பட்டை உணர்த்தியதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலை போல எங்கு கூட்டணி இல்லை என அறிவித்துவிடுவாரோ என அவர்களும் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டனர். டெல்லி மட்டுமின்றி முன்னாள் அமைச்சர்களும் தனக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என நம்பியதிலும், செங்கோட்டையனுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. ஈரோட்டில் அதிமுகவின் முகம் என்ற செங்கோட்டையனின் பிம்பத்தையும், அண்மையில் கோபிசெட்டிபாளையத்தில் மேற்கொண்ட பயணத்தின் மூலம் எடப்பாடி உடைத்தார். இதனால், கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்ய முடியாமல், செங்கோட்டையன் தனித்துவிடப்பட்டு இருக்கிறாராம். இதனால், நானே ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன் என விடுத்த சவால்கள் அனைத்தையும் செங்கோட்டையனே மறந்துபோக நினைக்கிறாராம்.

எதுக்குப்பா வம்பு:

இதுபோக, இனி தனித்து எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம். அதன் காரணமாகவே, டிடிவியை சந்தித்ததாக வெளியான தகவலுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்தார். அதனை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்ததகாவும் தகவல் வெளியானது. அதனையும் மறுத்து பேசுகையில், “சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக வதந்திகள் பரப்பப்படுகிறது, இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. திட்டமிட்டு என்னைப்பற்றி வதந்தி பரப்புகின்றனர்” என செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். எடப்பாடியை சமாதானப்படுத்தி கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் பெறுவாரா? அல்லது அரசியலில் அவர் புதிய பயணத்தை தொடங்குவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - April 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

Posted by - September 18, 2025 0
சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி. நாம் தும்மினாலும்…

பாஜக கொடுத்த பொறுப்பை தூக்கி எறிந்த அண்ணாமலை.!

Posted by - February 3, 2026 0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக சார்பாக தொகுதி பொறுப்பாளர்கள் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை அவர் நிராகரித்துள்ளார். இது…

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…

சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

Posted by - March 17, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TVK Vijay TN…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *