பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏன் எனவும், 16வது எண் நோட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் களத்தில் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கிய அவர், தமிழகம் முழுவதும் தனி அணியாக போட்டியிடுகிறார். அதிலும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து இந்த இரண்டு தொகுதிகளின் மீதும் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
விஜய்க்கு 16வது இடம்
இதில் சென்னையில் பெரம்பூர் தொகுதியில் தவெகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவிற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஓவ்வொரு வாக்காளரின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை இவிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. இதில் தவெக தலைவரும் வேட்பாளருமான விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் தவெகவினர் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், 16-ம் எண் நோட்டாவுடையது எனவும் இதில் வாக்களித்தால் யாருக்கும் எங்கள் வாக்களிக்க விருப்பமில்லையென நோட்டீஸ் பகிரப்பட்டது.
16வது இடம் ஒதுக்கப்பட்டது ஏன.?
இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர் வரிசைப் பட்டியலில் 16-ம் எண், தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூரை பொருத்த அளவில் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர் என்ற முறையிலும் சி.ஜோசப் விஜயின் பெயரில் வரும் ’ஜோ’ என்ற முதல் எழுத்து, தமிழ் அகர வரிசையின் இறுதியில் வருவதால், அவரது பெயர் 16-ம் எண்ணாக இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16வது இடம் நோட்டோவா- தேர்தல் ஆணையம் விளக்கம்
மேலும் 16-ம் எண் நோட்டாவுக்கானது (யாருக்கும் வாக்களிக்கவில்லை) என்று அங்கு கைப்பிரதிகள் கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்தாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், நோட்டாவை தேர்தல் கமிஷன் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தபோது அதை பிரபலப்படுத்துவதற்காக அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரதிகள் தான் இது என தெரியவந்துள்ளது.
ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தின் கடைசி பட்டன் (16-ம் நம்பர் பட்டன்) நோட்டா என்பதை பிரபலப்படுத்துவதற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அந்த நோட்டீஸ் தேர்தல் பொருட்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தவறுதலாக யாரோ எடுத்து வினியோகித்திருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் பெரம்பூர் தொகுதியில் 3 எந்திரங்களை பயன்படுத்துவதால், மூன்றாவது எந்திரத்தின் கடைசி பட்டனாக நோட்டா இருக்கிறது. எனவே இதில் யாரும் குழம்ப வேண்டாம். 15 வேட்பாளர்கள் மட்டுமே போட்டிபோடும் தொகுதியில் மட்டும்தான் அந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா 16-வது இடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.