ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக – பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?

179 0

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர அதிமுக – பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழக அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாட்களாக அரவமற்று இருந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

அதிரடி காட்டும் ஓ.பன்னீர்செல்வம்:

எடப்பாடி பழனிசாமியுடனான மோதலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பெரும்பாலும் பாஜக-வையே நம்பியிருந்த நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா தொடர்ந்து புறக்கணி்தது வந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று தடாலடியாக அறிவித்தார்.

விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மு.க.ஸ்டாலினை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்து பரபரப்பை கூட்டினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பீதியில் அதிமுக – பாஜக கூட்டணி:

அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, தமாக ஆகிய கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளே உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தற்போது பாஜக-விற்கு எதிரான போக்கை கையில் எடுத்திருப்பது அதிமுக – பாஜக கூட்டணியினருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பல முக்கிய தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர். நயினார் நாகேந்திரன் ஓ.பன்னீர்செல்வம் கேட்டிருந்தால் நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று கூறியது ஓ.பன்னீர்செல்வத்தை மேலும் கடுப்பாக்கியுள்ளது.

இதன் காரணமாகவே நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை வெளிப்படையாக ஓ.பன்னீர்செல்வம் காட்டினார்.  இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி அழைத்து வர வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

காரணம் என்ன?

தினகரன் உள்ளிட்ட அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று துடிப்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்று பெயர் எடுத்தவர், ஜெயலலிதா சிறையில் இருந்தபோது முதலமைச்சர் பதவி வகித்தவர், அவர் சிறையில் இருந்த வந்தவுடன் முதலமைச்சர் பதவியை மீண்டும் அவரிடமே கொடுத்தவர் என்று அதிமுக-வினரால் பல நன்மதிப்புகளை பெற்றவர்.

சமீபகால அவருக்கு பெரிய செல்வாக்கு அதிமுக-வினர் மத்தியில் இல்லாவிட்டாலும், அவருக்கான தனி செல்வாக்கு தென்மாவட்டத்தில் இருந்து வருகிறது. முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரிடம் செல்வாக்கு இன்னும் நீடித்து வருகிறது. தினகரன், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேனி மற்றும் அதன் சுற்று வட்டார தென் தமிழக பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவர்களை காட்டிலும் பன்மடங்கு செல்வாக்கு உள்ளது.

எதிர்தரப்பிற்கு சாதகமா?

தேர்தல் சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வை எதிர்த்தால் அது பாஜக கூட்டணியி்ல் இடம்பிடிக்கும் அதிமுக-வையும் எதிர்ப்பதற்கு சமமாக அமைந்துவிடும். இதனால், அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு விழ வேண்டிய வாக்குகள் வாக்குப்பதிவின்போது எதிர்க்கட்சிகளுக்கு விழும் சூழல் உண்டாகும். குறிப்பாக, திமுக அல்லது தவெக-விற்கே அந்த வாக்குகள் செல்லும் சூழல் உண்டாகும்.

எடப்பாடி பழனிசாமி வசம் முழுவதுமாக அதிமுக வந்துவிட்டாலும் தென்மாவட்டங்களில் அவரது செல்வாக்கு கொங்கு மண்டலத்திற்கு நிகராக இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு எதிர்ப்புகளே தென் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தே வருகின்றனர்.

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா ஓ.பி.எஸ்.?

இதனால், தேர்தல் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக எதிர்தரப்பிற்குச் சென்றுவிட்டால் முக்குலத்தோர் வாக்குகளில் பெரும்பாலான சதவீதம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு விழாமல் போய்விடும் என்றும், அது தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிமுக – பாஜக தலைமை அஞ்சுகிறது. இதனால்தான் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Post

முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்…

Posted by - March 17, 2026 0
“பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக…

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு

Posted by - March 27, 2026 0
திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்றும் அறிவிப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல். திருச்சி: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருச்சியை 2வது தலைநகராக்கும் அல்லது துணை தலைநகராக மாற்றும்…

’DMK FILES’

Posted by - January 7, 2026 0
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Posted by - April 15, 2026 0
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *