அங்க அடிச்சா.. இங்க வலிக்கும்.. இந்த டயலாக் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு பக்காவாக பொருந்திவிட்டது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதில் இருந்து, மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை பட்டையை கிளப்பி வருகிறது. இதுபோக பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான ஆயத்த பணிகள் மேலும் பக்கபலமாக இருந்துவிட்டது. இப்போது, வெறும் மூன்று மாதத்தில் பிஎஸ்என்எல் செய்துள்ள சம்பவத்தை பார்க்கலாம்.
ஒரு பக்கம் அடிமட்ட விலையில் ரீசார்ஜ் கட்டணங்கள், இன்னொரு பக்கம் 4ஜி சேவைகள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம், டெலிகாம் கஸ்டமர்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபமாக மட்டும் இல்லை, ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் அடிமட்ட விலையிலேயே ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருந்தது. ஆனால், 4ஜி சேவைகள் கிடைக்காததால், அந்த திட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.ஆனால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்திய பிறகு, அதிகப்படியான லாபம் கொடுப்பது பிஎஸ்என்எல் நிறுவனம்தான் என்பதை உணர்ந்துவிட்டனர். ஆனால், பிஎஸ்என்எல்லில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே திட்டங்கள் அடிமட்ட விலைக்கு இருக்கும். டேட்டா அதிகமாக கிடைத்தாலும், வேகம் போதாது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் 4ஜி சேவைகள் படிப்படியாக தொடங்கிவருவதை கணக்கில் கொண்டு, மற்ற டெலிகாம் கஸ்டமர்கள் கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறிவருகின்றனர். ஜூலையில் கட்டண உயர்வுக்கு பிறகு புதிய சிம் கார்டுகள் பற்றாகுறையாக மாறும் அளவுக்கு வாங்கி குவித்தனர். இதுபோக மற்ற சிம் கார்டுகளில் இருந்தும் பிஎஸ்என்எல்லுக்கு போர்ட் செய்ய தொடங்கினர்.
இந்த எண்ணிக்கை இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமல்லாமல், அதன் கஸ்டமர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஜூலை மாதத்தின் கணக்குப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களின் (Prepaid Customer) எண்ணிக்கை 88.41 மில்லியனாக இருந்தது. ஆனால், அடுத்த மூன்று மாதத்தில் இந்த ப்ரீபெய்ட் கஸ்டமர்களின் எண்ணிக்கை 92.04 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது.ஆகவே, வெறும் மூன்றே மாதத்தில் 3.63 மில்லியன் (36 லட்சம்) கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறி இருக்கின்றனர். அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 2.52 மில்லியன் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாறி இருக்கின்றனர். இதற்கு அடுத்த செப்டம்பர் மாதத்தில் 0.38 மில்லியன் கஸ்டமர்களும், அக்டோபர் மாதத்தில் 0.76 மில்லியன் கஸ்டமர்களும் மாறி இருக்கின்றனர். ஆகவே, புதிதாக மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வழங்குவதில் அந்த நிறுவனம் படுமும்முரமாக ஈடுப்பட்டுள்ளது. இப்படி ப்ரீபெய்ட் கஸ்டமர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், போஸ்ட்பெஸ்ட் கஸ்டமர்களின் (Postpaid Customer) எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அதாவது, ஜூலை மாதத்தில் 4.42 மில்லியனாக எண்ணிக்கை இருந்தது. ஆனால், அடுத்த மூன்று மாதங்களில் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களின் எண்ணிக்கை 4.48 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது. இதேபோல பிஎஸ்என்எள் பிராட்பேண்ட் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் இலவச லைவ் டிவி சேனல்களின் சலுகை காரணமாக அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் இலவச லைவ் டிவி சேனல்கள் சலுகை ஃபைபர் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டுவருகிறது.
ஆகவே, ஒட்டுமொத்தமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் புயல் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் 4ஜி சேவைகள் கிடைக்காத நேரத்திலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கு (BSNL 4G Services) அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களும் காத்திருப்பது உறுதியாகி இருக்கிறது.