இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் மாடல்களில் ஒன்றான பஞ்ச் மின்சார எடிஷனுக்கு போட்டியாக, ஹுண்டாய் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்த உள்ளது.
Punch Rival EV: ஹுண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மின்சார எஸ்யுவி, உள்நாட்டிலேயே இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக தயாராவதாக கூறப்படுகிறது.
பஞ்சிற்கு போட்டியாக காம்பேக்ட் எஸ்யுவி EV
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மின்சார காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் நாள் கொண்டாட்டத்தின் போது, “புதிய காம்பேக்ட் மின்சார எஸ்யுவி ஆனது இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட உள்ளது” என்பது உறுதி செய்யப்பட்டது. 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரானது, ப்ராண்ட் சார்பில் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள இன்ஸ்டெர் கார் மாடலை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் உற்பத்தியாகும் ஹுண்டாய் மின்சார கார்:
HE1i என்ற கோட்நேமை கொண்ட இந்த மின்சார காரானது, தமிழ்நாட்டில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹுண்டாய் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. எக்சைட் நிறுவனத்தில் இருந்து பெறப்படும் பேட்டரிகள் இந்த காரில் பயன்படுத்தப்பட உள்ளது. சந்தைப்படுத்தப்படும்போது இந்த காரானது, நாட்டின் முன்னணி மின்சார மைக்ரோ எஸ்யுவி ஆன டாடா பஞ்சிற்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ளது.
இன்ஸ்ரெட் கார் மாடலானது 3825 மில்லி மீட்டர் நீளம், 1610 மில்லி மீட்டர் அகலம், 1575 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 2580 மில்லி மீட்டர் வீல் பேஸை கொண்டுள்ளது. இதற்கு நிகரான கட்டமைப்பையே புதிய எஸ்யுவியும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு போட்டியாக கருதப்படும் பஞ்ச் மின்சார எடிஷன் 3857 மில்லி மீட்டர் நீளம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 பேட்டரி ஆப்ஷன்கள்- ரேஞ்ச்
புதிய கார் மாடலுக்கான விவரங்களை ஹுண்டாய் நிறுவனம் மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. அதேநேரம், இந்த காரில் ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐரோப்பிய சந்தையில் இன்ஸ்டெர் மின்சார காரானது, ஸ்டேண்டர்ட் ரேஞ்சில் 42KWh பேட்டரி ஆப்ஷனையும், லாஞ் ரேஞ்சில் 49KWh பேட்டரி ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 முதல் 355 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ஸ்டேண்டர்ட் ரேஞ்சானது 97bhp, 147Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மின்சார மோட்டாருடனும், லான்ஹ் ரேஞ்ச் 115bhp, 147Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மின்சார மோட்டாருடனும் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்..
சர்வதேச சந்தையில் கிடைக்கும் இன்ஸ்டெர் மாடலை போலவே, இந்திய சந்தைக்கு வரவிருக்கும் புதிய எஸ்யுவியும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஓவர் தி ஏர் அப்டேட்களுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், லெவல் 2 ADAS, இன் – கார் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களும் வழங்கப்படலாம்.
மற்ற முக்கிய அம்சங்களாக இரட்டை 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், வெண்டிலேடட் இருக்கைகள், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உடன் கூடிய 360 டிகிரி கேமரா, ஒன்றுக்கும் மேற்பட்ட ஏர்பேக்குகள் இடம்பெறலாம். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சார எஸ்யுவி ஆனது, முழுமையாக தரையுடன் மடக்கக் கூடிய இருக்கைகள், ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைனிங் பின்புற இருக்கைகளையும் கொண்டிருக்கலாம்.
விலை விவரங்கள்
டாடா பஞ்ச் மின்சார கார் மாடலின் விலை வரம்பானது ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி 14.44 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. இதற்கு போட்டியாக மிகவும் போட்டித்தன்மையுடன் ஹுண்டாயின் புதிய மின்சார காரின் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம், மிகவும் அணுகக் கூடிய விலைப்பட்டியலை வடிவமைப்பாது எளிதாகி உள்ளது. அதன்படி, தொடக்க விலையானது 9 முதல் 10 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்படலாம்.