புதுடெல்லி:
ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. பிரகதி மைதானத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.